பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கையை ஓரிருநாள்கள் மாத்திரம் முன்னெடுக்க முடியாது. மக்களுக்கு போதியளவு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர் சட்ட நடவடிக்கையை தீவிரமாக முன்னெடுக்குமாறும், அதனை உடனே ஆரம்பிக்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் செயற்றிட்டம் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
அதன் போது, ஆளுநர் தனது ஆரம்ப உரையில்,
அலுவலர்களை களத்துக்குச் சென்று பணியாற்றுமாறு திரும்பத் திரும்பக் கூறி வருகின்றபோதும் அலுவலகத்திலிருந்தே திட்டங்களை தயாரிக்கின்றனர்.
அதேபோல ஒரு விடயத்தைக் குறிப்பிட்டால் அதன் முன்னேற்றத்தை தொடர்ந்து கவனிக்கின்ற தன்மையும் இல்லை.
அரசாங்கத்தின் ஊடாக எமது மக்களுக்கான அபிவிருத்திகளைச் செய்வதற்கு சாதகமான சூழல் இருக்கின்றது. அதைப் பயன்படுத்தி மக்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவேண்டும்.
பெரும்பாலான வீதிகளின் ஓரங்களில் பார்த்தீனியம் செடி காணப்படுகின்றது. பார்த்தீனியத்தை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்படவேண்டும் என்பதுடன் விரைவாக அதைச் செயற்படுத்த வேண்டும் எனஆளுநர் தெரிவித்தார்.
அதன் போது, பிரதம செயலாளர், இது தொடர்பான சட்ட ஏற்பாடுகளைக் குறிப்பிட்டதுடன் அதற்கு அமைவாக வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட வேண்டும் எனவும், அதனுடன் தொடர்புடைய 12 திணைக்களங்களையும் இதில் இணைத்துக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் சட்டநடவடிக்கை எடுப்பதற்குரிய அலுவலர்களுக்கான அடையாள அட்டையையும் விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளரால் பார்த்தீனியம் ஒழிப்புக்குரிய நடவடிக்கை திட்டம் தயாரிக்கப்பட்டு சகல திணைக்களங்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அதை துரிதமாக நடைமுறைப்படுத்த சகலரும் ஒத்துழைக்கவேண்டும் எனவும் கோரினார்.
No comments