சுயாதீனமாக வேலை தேடும் நோக்கில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கான நடைமுறையில் புதிய திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார்.
வெளிநாட்டில் சுயாதீனமாக வேலை தேட விரும்பும் ஒருவர் பணியகத்தில் பதிவு செய்வதற்கு முன், குறித்த நபரை வௌிநாட்டிற்கு வரவழைப்பதற்கு எதிர்பார்க்கும் நபர் ஊடாக தேவையான ஆவணங்களை அந்த நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சமர்ப்பித்து வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தை சான்றளிப்பது கட்டாயமாகும் என்று இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதற்காக 60 அமெரிக்க டொலர் கட்டணமாக அறவிடப்படும் என்றும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
முதற்கட்டமாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தொழிலாளர் பிரிவுகள் செயல்படும் 13 நாடுகளில் உள்ள 15 இராஜதந்திர சேவை பிரிவுகளுக்கு மட்டுமே இந்த சட்டம் அமுல்படுத்தப்படும் என்றும், இது 2025 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் எனவும் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தொழில்முறை பிரிவில் இல்லாத வேலைகளுக்கு இந்த சட்டம் பொருந்தும் என்றும், தொழில்முறை வேலைகளின் கீழ் வரும் வேலை வகைகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் இணையதளத்தில் (www.slbfe.lk) பார்வையிட முடியுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்தால் சேவை ஒப்பந்தம் சான்றளிக்கப்பட வேண்டிய தேவையிலிருந்து விலக்கு பெற, பணியகப் பதிவைப் பெறும்போது ஒருவரின் தொழில்முறைத் திறனை நிரூபிக்க அல்லது ஒருவரின் கடவுச்சீட்டில் தொழில் குறிப்பிடப்படுவதற்குத் தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியமாகும்.
சுயாதீனமாக வேலை தேடும் நோக்கில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கையர்கள் பல்வேறு இடைத்தரகர்களால் தவறான செயல்கள் மற்றும் மோசடிகளுக்கு உள்ளாகுவதாக கடந்த காலங்களில் செய்திகள் வந்துள்ளதாகவும், எனவே தொழிலாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வேலைவாய்ப்பு ஒப்பந்தம், சரியான சம்பளம் மற்றும் ஒப்பந்தத்தை சரியான நேரத்தில் முடித்துவிட்டு இலங்கைக்குத் திரும்புவதற்குத் தேவையான வழிகளை வழங்குவதை ஒரு தேசிய கடமையாகக் கருதி, வேலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பணியகத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
2025 ஜூலை 1 முதல் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தொழிலாளர் பிரிவுகள் இயங்கும் 13 நாடுகளுக்கு மட்டுமே இந்த முறை செயல்படுத்தப்படும் என்றாலும், இந்த செயற்பாட்டின் வெற்றியின் அடிப்படையில் எதிர்காலத்தில் ஏனைய நாடுகளிலும் இது வெற்றிகரமாக செயற்படுத்தப்படும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
No comments