யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழி்ல் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், கடற்றொழி்ல் பிரதி அமைச்சர் ரத்ன கமகே மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அதன் போது கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையுரையாற்றுகையில்,
கடற்றொழி்ல் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து, அவற்றுக்கு விரைவான முடியுமான உயர்ந்த பட்ச தீர்வுகளை வழங்குவதே இக் கூட்டத்தின் முக்கிய நோக்கம்.
நாடு தழுவிய ரீதியாக குறிப்பாக பிரதானமான கடல்வளங்களை அண்டிய 15 மாவட்டங்களில் கடற்றொழி்ல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினை நடாத்தி பிரச்சினைகளை ஆராய்ந்து வருவதாகவும் அந்தவகையில் இதுவே யாழ்ப்பாண மாவட்டத்தின் முதலாவது கூட்டம் எனவும் தெரிவித்தார்.
மேலும், இக் கூட்டத்தினை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை நடாத்தவுள்ளதாகவும், மூன்று வார முன்னறிவித்தலின் அடிப்படையில் கூட்டம் நடாத்தப்படும் எனவும், கூட்டத்திற்கு முன்னர் தங்களின் ஆலோசனைகள் பரிந்துரைகள் பிரச்சினைகளை எழுத்து மூலம் அனுப்பிவைக்கப்படும் பட்சத்தில் எம்மால் சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகளை அழைத்து ஒருங்கிணைத்து விரைவான தீர்வுகளை காணமுடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் கலந்து கொண்ட கடற்றொழி்ல் பிரதி அமைச்சர் ரத்ன கமகே கருத்து தெரிவிக்கையில்,
அரசாங்கம் கொள்கை ரீதியான முடிவுகளை அமைச்சில் எடுத்தாலும், பிரதேச மட்டத்தில் உள்ளூர் அமைப்புக்களை ஒன்றிணைத்து தீர்வுகளை காண வேண்டும் என்ற நோக்கத்துடன் இக் கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்றொழி்ல் சார்ந்த குடும்பங்கள் மாவட்ட சனத்தொகையில் அண்ணளவாக 38% ஆகவுள்ளதாகவும், அதனால் விசேடமாக கவனிக்கப்பட வேண்டிய மாவட்டமாகவுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் சனாதிபதி கடற்றொழி்ல் விடயத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், குறுகிய காலத்தில் தீர்க்க வேண்டிய கடற்றொழி்லாளர்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார் எனவும், எமது அரசாங்கம் வறுமை ஒழிப்பு, டியிற்றல் முறைமை மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா போன்ற விடயங்களில் அக்கறை செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி, உள்ளூர் மீனவர்களின்சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகள், மயிலிட்டி துறைமுக மூன்றாம் கட்ட அபிவிருத்தி போன்ற விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் மேலதிக செயலாளர், வடமாகாண மீன்பிடி அமைச்சின் செயலாளர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்பு திணைக்களம், கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாாிகள் மற்றும் கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனம், தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகாமை (NARA), இலங்கை தேசிய நீர் உயிர் இன வளர்ப்பு அதிகார சபை (NAQDA) ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
No comments