அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்போது சுற்றுச் சூழலைக் கவனத்திலெடுக்காமல் செயற்படமுடியாது. சுற்றுச்சூழல் பாதிப்பை குறைத்தே அதனைச் செயற்படுத்தவேண்டும். இதன்மூலமே எதிர்கால சந்தத்திக்கு வளமான சுற்றாடலைக் கையளிக்கமுடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
பசுந்தேசம் அமைப்பும், இயற்கை நண்பர்கள் இயக்கமும் இணைந்து நடத்திய சர்வதேச சுற்றுச்சூழல் தின நிகழ்வு கைதடி சிறுவர் பூங்காவில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் இவ்வாறான சர்வதேச சுற்றுச்சூழல் தினம் எதுவும் இருக்கவில்லை. இன்று எல்லாவற்றுக்கும் தினம் கடைப்பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்.
எதன் ஒன்றின் தேவை உணரப்படுகின்றதோ அதற்கு இன்று நாள்களை கடைப்பிடிக்கின்றோம். அந்த வகையில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படவேண்டியதன் அவசியம் எழுந்துள்ளமையால் அதற்கும் சர்வதேச நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.
நாம் மீண்டும் சில விடயங்களில் பழைமைக்கு திரும்புவது சூழலை பாதுகாக்கும் என்று கருதுகின்றோம். அன்றைய நாள்களில் 'சொப்பின்பை' என்று எதுவுமில்லை. ஆனால் இன்று எங்கும் எதிலும் 'சொப்பின்பை'. அதை இலகுவாகவும் இலவசமாகவும் பெற முடிகின்றது.
அன்றைய நாள்களில் சிமெந்துதாள்களில் செய்த 'மரத்தாள்பை' பயன்படுத்தப்பட்டது. இன்று வெளிநாடுகளில் 'சொப்பின்பை' பணத்துக்கே கொடுக்கின்றார்கள். அதைப்போன்று இங்கும் அதன் பாவனையை இறுக்கமாக்கவேண்டும்.
பெரியவர்கள் எதைச் செய்கின்றார்களோ அதைப்பார்தே சிறுவர்கள் பழகுகின்றார்கள். அவர்கள் சுற்றாடலை பாதிப்படையச் செய்கின்றார்கள் என்றால் பெரியவர்களாகிய எங்களின் செயற்பாடுகளே காரணம்.
யாழ்ப்பாணம் பண்ணைக் கடற்கரையைச் சென்று பாருங்கள். அந்தப் பிரதேசம் எங்கும் சொப்பின்பைகள் நிறைந்திருக்கும். இப்போது ஆலயத் திருவிழாக்களிலும் பிளாஸ்ரிக் போத்தல்கள், பிளாஸ்ரிக் குடிபானம் வழங்குகின்றார்கள். அதைக்குடித்துவிட்டு அந்த இடத்திலேயே போட்டுவிட்டு போகின்றார்கள். அவற்றை உரிய குப்பைத்தொட்டியில் போடுவதற்கு பெரியவர்கள் முயற்சிக்கவேண்டும். அப்போதுதான் சிறுவர்கள் அதைப்பார்த்து பழகுவார்கள்.
எதிர்காலத்திலாவது மாற்றத்தை உருவாக்கலாம். எங்களால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்றில்லை. எதையும் செய்யலாம். இந்த மாற்றத்தை உருவாக்குவதன் விதை விழிப்புணர்வில்தான் தொடங்குகின்றது.
இதைப்போல மற்றொரு விடயம் மரம் நடுகை. இன்றைய சூழல் வெப்பநிலை அதிகரித்துச் செல்கின்றது. மரங்களை நடுகை செய்வது மாத்திரமல்லாது அதனை கவனமாக வளர்த்தெடுக்கவேண்டும். இதை நாங்கள் செய்யும்போது அதைப்பார்த்து நாளைய சந்ததி பழகும். இதுவே எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் நேயம்மிக்க சமூகத்தை உருவாக்கும் என ஆளுநர் மேலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் செம்முகம் ஆற்றுகைக் குழுவினர் வழங்கிய 'கருவுக்குள் உயிர்க்கும்' ஆற்றுகை நிகழ்வு நடைபெற்றது.
அத்துடன் பசுந்தேசம் அமைப்பு நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கான விருதுகளும் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.
சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர் தி.சுதர்சன், யாழ்.மாவட்டச் செயலக முகாமைத்துவ சேவைகள் தலைமை நிர்வாக அதிகாரி வசந்தினி கௌரிதரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
No comments