கோப்பாய் பொலிஸார் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி தங்கியுள்ளதுடன் , அங்கிருந்து வெளியேற மறுத்து வருவதாக கோப்பாய் பிரதேச செயலர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் முழுமையான இராணுவ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 1995ஆம் ஆண்டு காலம் முதல் கல்வியங்காட்டு பகுதியில் உள்ள 09 தனியார் வீடுகளையும் அதனுடன் கூடிய காணிகளுமாக 2.77 ஏக்கர் காணியை அடாத்தாக கையகப்படுத்தி 30 வருடங்களுக்கு மேலாக பொலிஸார் தங்கியுள்ளனர்.
அந்நிலையில் தமது காணிகளை விட்டு பொலிஸார் வெளியேற வேண்டும் என காணி உரிமையாளர்கள் தொடர்ச்சியாக கோரி வரும் நிலையில் , தற்போது நீதிமன்றில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இது தொடர்பில் கோப்பாய் பிரதேச செயலர் தெரிவிக்கும் போது,
09 தனியார் காணிகளை பிடித்தே கோப்பாய் பொலிஸ் நிலையம் மற்றும் பொலிசாரின் தங்குமிடம் என்பவற்றை அமைத்துள்ளனர். குறித்த காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்குமாறும் , பொலிஸ் நிலையத்திற்கு என 1.25 ஏக்கர் அரச காணி பொலிஸாருக்கு ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ள போதிலும் , அக்காணிக்கு செல்ல மறுத்து தொடர்ந்தும் தனியார் காணிகளில் தங்கியுள்ளனர் என தெரிவித்தார்.
No comments