யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் கடற்தொழிலுக்கு சென்ற கடற்தொழிலாளி கரை திரும்பாத நிலையில் சக தொழிலாளிகள் அவரை கடலில் தேடி வருகின்றனர்
மணல்காட்டை சேர்ந்த அ.ஆனதாஸ் (வயது 38) என்பவரே காணாமல் போயுள்ளார்.
மணல்காட்டில் இருந்து நேற்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை கட்டுமரத்தில் தொழிலுக்காக கடலுக்குள் சென்றுள்ளார். கடலுக்கு சென்றவர் வழமையாக காலை 09 மணியளவில் கரை திரும்பி விடுவார்.
ஆனால் நேற்றைய தினம் காலையில் அவர் கரை திரும்பாததால் , சக தொழிலாளிகள் அவரை தேடி கடலுக்கு சென்ற வேளை , கடலில் அவரது கட்டுமரம் மாத்திரம் கடலில் மிதந்த வண்ணம் காணப்பட்டுள்ளது.
அதனை மீட்டு கரை சேர்ந்த தொழிலாளிகள் இரண்டாம் நாளான இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் , அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேவேளை , சட்டவிரோத கடலட்டை தொழில் செய்பவர்களின் படகு கட்டுமரத்தில் மோதி விபத்தினை ஏற்படுத்தி இருக்கலாம் என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த வாரம் முல்லைத்தீவில் சட்டவிரோத தொழில் செய்வோரினால் மீனவர் ஒருவரின் படகு மோதப்பட்டு விபத்து ஏற்படுத்தப்பட்டதாக முல்லைத்தீவு மீனவர்கள் குற்றம் சாட்டி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments