யாழ்ப்பாணத்தில் மலக்கழிவுகள் , சுகாதார கழிவுகளை வயல் காணிகளில் கொட்டப்பட்டு வருவதனால் அயலில் வசிக்கும் மக்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
காக்கை தீவு பகுதியை அண்மித்த வயல் காணிகள் , அதனை சூழவுள்ள வெற்றுக்காணிகளுக்குள் இனம் தெரியாத நபர்கள் இரவு வேளைகளில் மலக்கழிவுகள் உட்பட கழிவுகளை பவுசர் வாகனத்தில் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர்.
அதனால் அயலில் வசிக்கும் மக்கள் தூர்நாற்றம் உள்ளிட்ட சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுத்த வண்ணமே வாழ்ந்து வருகின்றனர். அத்துடன் , நிலத்தில் கொட்டப்படும் மலக்கழிவுகள் நிலத்தடி நீருடன் கலக்கும் அபாயம் காணப்படுவதுடன் , மழை காலங்களில் வெள்ள நீருடன் கலந்து நீர் நிலைகளுடன் கலப்பதுடன், வீடுகளுக்குள் வெள்ள நீருடன் கலந்து வருவதனால் , அப்பகுதி மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்தே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க இளங்குமரனுக்கு அறிவித்ததை அடுத்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அப்பகுதி சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் , நிலைமைகளை நேரில் அவதானித்ததுடன் , இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பேன் என அப்பகுதி மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
No comments