Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில். 257 நாய்களுக்கு கருத்தடை


யாழ்ப்பாணத்தில் நல்லூர் மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதியில் 257 பெண் நாய்களுக்கு கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,  தொடர்ந்தும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும் அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநரின் ஆலோசனை மற்றும் அறிவுறுத்தலுக்கு அமைவாக வடக்கு மாகாண உள்ளூராட்சி, விவசாய மற்றும் சுகாதார அமைச்சுக்கள் இணைந்து முன்னெடுக்கும், பெண் நாய்களுக்கு இலவசமாக கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் செயற்றிட்டமானது பிரதேச செயலகங்கள் மற்றும் பிரதேச சபைகளின் பூரண ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

குறித்த செயற்திட்டம் தொடர்பில் அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன் மேலும் தெரிவிக்கையில், 

கட்டாக்காலி நாய்களால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வரும் சூழலில் அதனைக் கட்டுப்படுத்தும் முகமாகவும், விலங்கு விசர் நோயைக் கட்டுப்படுத்தும் முகமாகவும் வடக்கு மாகாணத்தின் மூன்று அமைச்சுக்கள் இணைந்து முன்னெடுக்கும் வகையில் மூன்றாண்டு கால செயற்றிட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

அதற்கு அமைவாக, கடந்த 10ஆம் திகதி நல்லூர் மற்றும் வலி. கிழக்கு பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளில் பெண் நாய்களுக்கு இலவசமாக கருத்தடை சத்திரசிகிச்சை மேற்கொள்ளும் செயற்றிட்டமானது முன்னெடுக்கப்பட்டது. 

இந்த வாரம் இன்றைய தினம் புதன்கிழமை தொடக்கம் சனிக்கிழமை வரை நல்லூர் மற்றும் வலி.கிழக்கு பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளில் மேற்படி செயற்பாடு முன்னெடுக்கபடுவதுடன், வலி.தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளது. 

தொடர்ந்து மாகாணத்தின் ஏனைய இடங்களிலும் கால அட்டவணைபடி இச்செயற்பாடு இடம்பெறும்.    

பொதுமக்கள் தமது வீடுகளில் உள்ள பெண் நாய்களை கொண்டுவந்து குறித்த தினங்களில் இலவசமாக சத்திரசிகிச்சை மேற்கொள்ளமுடியும். 

அதேவேளை நாய்களை பிடித்துவழங்க விரும்புபவர்கள் நாய்பிடிப்பாளர்களாக பிரதேசசபைகளில் பதிந்து, தமக்கான முற்தடுப்பு ஊசிகளை பெற்று, நாய்களை பிடித்து வழங்கமுடியும். 

பிடித்து வழங்கும் நாய் ஒன்றறுக்கு 600 ரூபாவை பெற்றுகொள்ளமுடியும், என மேலும் தெரிவித்தார். 

No comments