Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

5 அரசாங்கங்கள் மாறியும் எமக்கு தீர்வில்லை - 09 வருடங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்


படங்கள் :- ரவி (கிளிநொச்சி ஊடகவியலாளர்)

கிளிநொச்சியில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் ஒன்றிணைந்து, போராட்டம் ஆரம்பித்து, 09 ஆண்டுகள் நிறைவடைகின்றமையை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிள்ளையார் கோவில் முன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமான போராட்டம் அங்கிருந்து, பேரணியாக கிளிநொச்சி மாவட்ட காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் பிராந்திய அலுவலகம் முன் சென்று அங்கு தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்திய பின்னர்  டிப்போ சந்தி பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் ஆலய முன்றலில் நிறைவடைந்தது.

போராட்டத்தின் முடிவில் உறவுகளால் வாசிக்கப்பட்ட அறிக்கையில், 

“வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களாகிய நாங்கள் யுத்தம் முடிவடைந்து 16 வருடங்களை கடந்தும் போராடி வருகிறோம். 

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் கந்தசாமி கோவில் முன்றலில் கடந்த 20.02.2017 அன்று ஆரம்பிக்கப்பட்ட எமது போராட்டம் இன்றுடன் 3287 நாட்களைக் கடந்தும் எமக்கு எந்த வித பதிலும் நீதியும் கிடைக்கப் பெறவில்லை, 

நாம் தள்ளாடும் முதிர்ந்த வயதிலும் நாம் தொடர்ந்தும் போராடி வருகின்றோம், பிள்ளைகளைத் தேடி அலையும் தாய்மார்களாகிய எங்களின் கண்ணீருக்கு என்ன பதில்?

மீண்டும் சர்வதேச நாடுகளுக்கு நாம் வலியுறுத்துவது யுத்தத்திற்கு முன்பும் பின்பும் எமது தமிழ் இனத்துக்கு நடைபெற்ற இன ஒடுக்குமுறைகளின் மிக உச்சக்கட்டமாக 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனவழிப்புக்கு இது வரை நீதி கிடைக்கவில்லை, நாம் எம் கண் முன்னே பார்த்து சொல்லனாத் துயரத்தை அனுபவித்தோம் . அது மட்டுமின்றி இன்றும் இன ஒடுக்குமுறைக்கு நீதி கிடைக்கவில்லை.

அண்மையில் நிகழ்ந்த இயற்கை சீற்றம் காரணமாக டித்வா புயலால் ஏற்பட்ட பேரழிவிற்கு சர்வதேச நாடுகள் காட்டிய அக்கறைப் போல ஏன் ஒரே நாட்டில் போரின்போது ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள், சிறுகுழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், இளைஞர் யுவதிகள் , வயது முதிர்ந்தவர்கள், கொன்று குவிக்கப்பட்டபோது அமைதி காத்தார்கள் அப்போது நடைபெற்றது மனித உரிமை மீறல் இல்லையா?

 உங்களின் மனித உரிமைகள் செயற்பாடு அன்று ஏன் அமைதி காத்தது ?யுத்தம் முடிவுக்கு வந்த பின்பு சரணடைந்தவர்கள் பல ஆயிரக்கணக்கானோர் சிறுகுழந்தைகளுடனும் குடும்பம் குடும்பமாகவும் இராணுவத்தின் கையில் ஒப்படைக்கப்பட்டார்கள். 

பல ஆயிரக்கணக்கானோர் வடக்கு கிழக்கில் இராணுவ கட்டுப்பாடு பகுதியில் வைத்து கடத்தி செல்லப்பட்டார்கள்.

வெள்ளை வானில் கடத்தி செல்லப்பட்டவர்களும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர்களுக்கும் என்ன நடந்தது. அவர்களை என்ன செய்தார்கள் என்பதனை யுத்தம் முடிவடைந்த பின்பு ஆட்சிக்கு வந்த 5 அரசுகளிலும் எந்த அரசும் இதற்கான பொறுப்புக்கூறவில்லை என்பதை நாம் தெட்டதெளிவாக கூற முடியும் ஏன் என்றால் அவர்கள் குற்றத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், தமது இராணுவத்தை காட்டி கொடுக்க மாட்டார்கள் .

 இரண்டும் நடை பெறாத இடத்தில் எப்படி பொறுப்பு கூறல் நடைபெறும். சர்வதேச சமூகத்திடம் நாம் கேட்டுக் கொள்வது கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழிகளில் இருந்து எடுக்கப்பட்ட மனித எச்ச எலும்புகூடுகளுக்கு முறையான சர்வதேச நிபுணர்த்துவர்களின் பங்களிப்புடன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

குறிப்பாக புதைகுழிகள் பல மூடப்பட்டுள்ளன. தற்போது செம்மணி புதைகுழிக்கான அகழ்வுப்பணிகள் இடை நிறுத்தப்பட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுகொண்டு இருக்கின்றது.

எனவே அதற்கான சர்வதேச தலையீடு அவசியம் என்பதனை வலியுறுத்தி நிற்கின்றோம். 

படுகொலையை செய்யும் இராணுவத்திற்கு பதவி உயர்வு வழங்கும் நாட்டில் எமக்கான நீதி வழங்கப்பட மாட்டாது . எனவே தான் நாம் சர்வதேச நீதி கேட்டு 3287 நாட்களைக் கடந்து போராடி வருகின்றோம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சாட்சிகளாக இருந்த 400 மேற்பட்ட தாய் தந்தையரை இழந்து நிற்கின்றோம். அவர்களின் பிள்ளையின் உண்மை நிலை அறியாமல் ஏக்கத்துடன் மரணித்து விட்டார்கள். மிகுதியாக எஞ்சியிருக்கும் சாட்சியங்களாக இருக்கின்ற நாங்களும் இறப்பதற்கு முன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என கண்டறிய சர்வதேச சிறப்பு சுயாதின விசாரணையை வலியுறுத்தி நிற்கின்றோம். எனவே பின்வரும் கோரிக்கைகளையும் முன்வைக்கின்றோம்

1.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும்.

2.அரசியல் கைதிகள் நிபந்தனை இன்றி உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும்

3. நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்தை[P.T.A]அத்தோடு புதிதாக அமுல்படுத்த இருக்கும் பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம்[PSTA] இரண்டு சட்டங்களும் உடனடியாக நீக்கப்படவேண்டும்.

4 இராணுவ முகாம்கள் வட கிழக்கில் மூடப்பட வேண்டும்.

5வட கிழக்கில் மனித புதைகுழிக்கான அகழ்வு பணியை கண்காணிக்க சர்வதேச நிபுணர்களின் தலையீடுவேண்டும்.

6பத்திரிகையாளர்கள், மற்றும் சிவில் அமைப்பு பிரதிநிகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் புலனாய்வுத் துறையின் அச்சுறுத்தல் உடனடியா நிறுத்தப்பட வேண்டும்.

7 பொளத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும்.

8எமது தாயகத்தின் வளச் சுரண்டல் நிறுத்தப்படவேண்டும்.

8அனத்து வகையாக தாயகத்தில் மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன் வைக்கிறோம் என்றனர்.













No comments