ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொலை செய்து, மேலும் நால்வருக்குக் காயம் ஏற்படுத்திய குற்றச் செயலுக்கு உதவிய சந்தேகநபரும் , அவருக்கு உதவிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றச் செயலின் பின்னர், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் துப்பாக்கியுடன் தப்பிச் சென்ற முச்சக்கர வண்டியின் சாரதியே இந்த சந்தேகநபர் என்பதும், குறித்த சந்தேகநபருக்கு பெண் துணையாக இருந்துள்ளார் என்பதும் மேலதிக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 14 ஆம் திகதி இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்த நிலையில், கொழும்பு வடக்கு பிரிவு குற்றத் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதற்கமைய, நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கடவத்தை - சூரியபாலுவ பகுதியிலும், வெல்லம்பிட்டிய - வெஹெரகொடல்ல பகுதியிலும் வைத்து சந்தேகநபரும் சந்தேகநபரான பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடம் இருந்து 06 கிராம் 540 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் சந்தேகநபரையும், 03 கிராம் 100 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 44 வயதுடையவர் எனவும், சந்தேகநபரான பெண் 29 வயதுடையவர் எனவும் இவர்கள் சேதவத்தை மற்றும் வெஹெரகொடல்ல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை 07 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கரையோர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







No comments