Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ரிக்ரொக் தளத்தில் மாணவிகள் தொடர்பில் தவறான தகவல்களை பரப்பிய மாணவன் - ஊர்காவற்துறை பொலிஸாரின் அசமந்தம் ; 20 நாட்களின் பின்னரே கைது


பாடசாலை மாணவிகள் மற்றும் மாணவி ஒருவரின் தாயார் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமான பதிவுகளை மேற்கொண்ட சக மாணவன் தொடர்பில் , நியாயம் கேட்டு சென்றவர்களை கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய மாணவனின் தந்தையும் அவதூறு பரப்பிய மாணவனையும் பொலிஸார் சுமார் 20 நாட்களின் பின்னர் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர். 

நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட மாணவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், கூரிய ஆயுதங்களால் தாக்கிய மாணவனின் தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

வேலணை பகுதியில் உள்ள பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் சாதாரண தர கணித பாடத்தில் சித்தி பெறாதமையால் , கணித பாடத்திற்கு தோற்றுவதற்காக சாதாரண தர கணித வகுப்பிற்காக தனியார் வகுப்பில் கல்வி கற்றுள்ளான். 

அந்த கணித வகுப்பில் கற்கும் மாணவர்களின் வாட்ஸ் அப் குழுவில் உள்ள மாணவிகளின் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இரு மாணவிகளின் (profile) புகைப்படங்களை எடுத்து , மற்றுமொரு மாணவி தனது தாயாரின் தொலைபேசி இலக்கம் ஊடாகவே வாட்ஸ் அப் குழுவில் இணைந்திருந்தமையால் மாணவியின் தொலைபேசி இலக்கம் என மாணவியின் தாயாரின் தொலைபேசி இலக்கத்தை எடுத்து , இரு மாணவிகளின் புகைப்படங்களுடன் அவர்களை தவறானவர்களாக சித்தரித்து , மாணவியின் தாயரின் தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு , அந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு போலி "ரிக் ரொக்" தளத்தில் பதிவிட்டுளளார்.

அதனால் மாணவியின் தாயாரின் இலக்கத்திற்கு பல தொலைபேசி இலக்கங்களில் இருந்து தவறான நோக்குடன் தொலைபேசி அழைப்புக்கள் வந்த நிலையில் , மாணவியின் மூத்த சகோதரன் அது தொடர்பில் விசாரித்த வேளை , ரிக் ரொக் தளம் ஒன்றில் இருந்தே இலக்கத்தை பெற்றதாகவும் , குறித்த தளத்தின் இணைப்பினையும் தொடர்பு கொண்டவர்கள் கூறியுள்ளனர். 

அதன் அடிப்படையில் குறித்த ரிக் ரொக் தளம் தொடர்பில் ஆராய்ந்த வேளை அது தனது சகோதரியுடன் கணித வகுப்பில் கற்கும் மாணவனுடையது என்பதனையும் , மாணவன் வேலணை பகுதியை சேர்ந்தவர் என்பதனையும் கண்டறிந்து மாணவனின் வீட்டிற்கு நியாயம் கேட்க தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். 

அங்கு சென்று மாணவனின் தகப்பனிடம் மாணவனின் செயற்பாடுகள் குறித்து தெரிவித்து , மாணவனின் தொலைபேசியை பரிசீலித்த வேளை மாணவனே , அந்த ரிக் ரொக் தளத்தினை இயக்கி வருவதனை கண்டறிந்து தகப்பனிடம் காட்டி, மாணவனின் தொலைபேசியுடன் , பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிட போவதாக பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரன் கூறிய வேளை , தந்தை அவர்களுடன் முரண்பட்டு வீட்டிற்கு சென்றவர்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார். 

அதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கூட சென்றவர்கள் அவரை மீட்டு வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற வேளை , ரிக் ரொக் தளத்தில் அவதூறு ஏற்படுத்திய மாணவனும் ,  தந்தையும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் சென்று தனது மகனை மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடாத்த முற்பட்டதாக முறைப்பாடு வழங்கியுள்ளார். 

முறைப்பாட்டின் பிரகாரம் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய ஊர்காவற்துறை பொலிஸார் மாணவனின் வீட்டிற்கு சென்ற இளைஞன் ஒருவனை கைது செய்ததுடன் , ஏனையவர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கையும் எடுத்து இருந்தனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனை மறுநாள் ஊர்காவற்துறை நீதிமன்றில் மாணவனின் தந்தையின் முறைப்பாட்டின் அடிப்படையில் முற்படுத்தினர். அதனை அடுத்து இளைஞனை நீதிமன்று விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது. 

மறுநாள் சட்டத்தரணி நகர்த்தல் பத்திரம் ஊடாக கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு எதிராக பொய்யான முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் , மாணவிகள் தொடர்பில் ரிக் ரொக் தளத்தில் பரப்பப்பட்ட தகவல் தொடர்பில் நியாயம் கேட்க சென்ற வேளை வாள் வெட்டு தாக்குதல் நடாத்தப்பட்டு , இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் விடயம் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு , விளக்கமறியலில் உள்ள இளைஞனுக்கு பிணை விண்ணப்பம் செய்யப்பட்டதை அடுத்து , பிணையில் இளைஞன் விடுவிக்கப்பட்டார். 

அதேவேளை , மாணவிகளின் புகைப்படத்தினை பயன்படுத்தி , மாணவி ஒருவரின் தாயின் தொலைபேசி இலக்கத்தை பதிவிட்டு , ரிக் ரொக் தளத்தில் தவறான தகவல்களை பரப்பிய சம்பவம் தொடர்பில் ஏன் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யவில்லை என மன்று கோரிய வேளை , முறைப்பாடு அளிக்க சென்ற தம்மை மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் பொலிஸ் நிலையத்தில் காவல் காக்க வைத்திருந்தும் முறைப்பாட்டை பொலிஸார் ஏற்காது , தவறான தகவல்களை பரப்பிய மாணவனின் தந்தையின் முறைப்பாட்டை மாத்திரமே பெற்றுக்கொண்டனர் என பாதிக்கப்பட்ட தரப்பினர் மன்றில் தெரிவித்தனர். 

அது தொடர்பில் சத்திய கடதாசி முடித்து தருமாறு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு மன்று அறிவுறுத்தி இருந்தது. 

இந்நிலையில் , பாதிக்கப்பட்ட தரப்பினர் மீண்டும் முறைப்பாடு செய்ய சென்ற வேளை இது சைபர் க்ரைம் பிரிவில் முறையிட வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள சைபர் க்ரைம் பிரிவினர் "ரிக் ரொக்" தளம் தொடர்பில் தாம் முறைப்பாட்டை ஏற்க மாட்டோம் என திருப்பி அனுப்பியுள்ளனர். 

இந்நிலையில் மீண்டும் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் பெப்ரவரி மாதம் இறுதியில் முறைப்பாடு செய்த நிலையில் , பொலிஸார் சுமார் 20 நாட்களின் பின்னர் மாணவனையும் அவரது தந்தையும் கைது செய்து, தந்தையை மீது கூரிய ஆயுதங்களால் தாக்கினார் என்ற குற்றச்சாட்டின் கீழும் , மாணவனை சமூக ஊடகத்தில் அவதூறு ஏற்படுத்தினார் என குற்றச்சாட்டின் கீழும் இரு வேறு வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். 

வழக்கினை விசாரித்த மன்று தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் , மாணவன் 18 வயதினை பூர்த்தி செய்யாதமையால் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தடுத்து வைக்கவும் உத்தரவிட்டதுடன் வழக்கினை எதிர்வரும் 2ஆம் திகதிக்கு திகதியிட்டது. 

No comments