சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், இராமாயண யாத்திரையுடன் தொடர்புடைய பல இடங்கள் வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ளன அவை தொடர்பில் இந்தியாவில் உள்ள உங்கள் நண்பர்கள் , உறவினர்கள் ஆகியோரிடம் பகிர்ந்து கொண்டு, எதிர்காலத்தில் அவர்களையும் வடக்கு மாகாணத்துக்கு வருகை தர நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என இந்திய துவிச்சக்கரவண்டி பயணக் குழுவினரிடம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும் இந்தியாவிலிருந்து வருகை தந்த 'டீம் பைசன்' (Team Bison) துவிச்சக்கரவண்டி பயண அணியினருக்கான கௌரவிப்பு நேற்றைய தினம் சனிக்கிழமை யாழில். உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
ஆயிரக்கணக்கான வருடங்களாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிகச் சிறந்ததும் நெருக்கமானதுமான உறவு காணப்படுவதுடன், இந்தியா எமக்குத் தொடர்ந்தும் பல வழிகளில் உதவிகளை வழங்கி வருகின்றது.
மூன்று தசாப்த காலக் கொடிய போரால் வடக்கு மாகாணம் கடுமையாகப் பாதிக்கபட்டிருந்தாலும், தற்போது இங்கு மிகவும் அமைதியான சூழல் நிலவுகின்றது.
யாழ்ப்பாணத்துக்கும் சென்னை மற்றும் திருச்சி ஆகிய நகரங்களுக்கும் இடையிலான நேரடி விமான சேவை, காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்துக்கும் இடையிலான கப்பல் சேவை என்பன ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், இந்தியச் சுற்றுலாவிகளின் வருகை எமது மாகாணத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது.
நாமும் ஒரு சகோதரனைப் போல இந்தியாவுடன் மிகச் சிறந்த உறவைப் பேணி வருகின்றோம்.
வடக்கு மாகாணத்தில் தற்போது சுற்றுலாத்துறை வேகமான வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. அதேநேரம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உறுதியான தலைமையின் கீழ், போதைப்பொருள் பாவனைக்கு எதிரான மிகப்பெரியதொரு போராட்டத்தை எமது நாடு தற்போது முன்னெடுத்து வருகின்றது. போதைப்பொருளை எமது நாட்டிலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு நாம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றோம்.
அதேவேளை, எமது ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானதாகும். எமது மூதாதையர்கள் பாரம்பரிய கிராமப்புற உணவுகளை உட்கொண்டதாலேயே மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால், சிறுவர்கள் தற்போது துரித உணவுகளை நாடும் நிலை காணப்படுகின்றது.
இந்த நிலைமை மாற்றப்பட்டு, ஆரோக்கியமான பாரம்பரிய உணவுகளின் பக்கம் நாம் மீண்டும் கவனம் செலுத்த வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, வலிமையான சமூகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சைக்கிள் சுற்றுலா, இளைஞர்களுக்கு ஓர் உத்வேகத்தை அளிப்பதுடன், சமூகத்துக்குச் சாதகமான பங்களிப்பை எவ்வாறு வழங்குவது என்பதற்கான சிறந்ததொரு முன்மாதிரியாகும்.
சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், இராமாயண யாத்திரையுடன் தொடர்புடைய பல இடங்கள் வடக்கில் அடையாளங்காணப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன.
நெடுந்தீவு போன்ற தீவுகளில் அனுமனின் பாதச் சுவடுகள் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். இவ்வாறான வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை நீங்கள் பார்வையிடுவதுடன், உங்களின் இந்தப் பயண அனுபவங்களை இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு, எதிர்காலத்தில் அவர்களையும் வடக்கு மாகாணத்துக்கு வருகை தர நீங்கள் ஊக்கப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.




.jpeg)


No comments