பொலிஸார் பௌத்தர்களாக இருப்பதனால் , பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முயல்பவர்களை தடுத்து சட்ட மீறல்களை செய்ய முனைகின்றார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள பகுதிக்குள் உள்ள வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான "பவானி"வீதியை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கு விசாரணையின் போது வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார்.
குறித்த வழக்கு விசாரணையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விகாரை பகுதிக்குள் அமைத்துள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை மீட்டால் சமாதான சீர்குழைவு ஏற்படும் என பொலிஸார் மன்றில் தெரிவித்து இருக்கின்றனர்.
பிரதேச சபைக்கு சொந்தமான வீதியை மறித்து வேலி அடைத்து வைத்துள்ள நிலையில் அதனை சட்டத்தின் பிரகாரம் அகற்ற பிரதேச சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
சட்டத்தினை நடைமுறைப்படுத்துபவர்களை தடுக்க முற்படுபவர்கள் , இடையூறு ஏற்படுத்துபவர்களுக்கு எதிராகவே பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்கே வீதியை பிடித்து வைத்துள்ள விகாராதிபதி , சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் சமாதான சீர்குழைவு ஏற்படும் என முறைப்பாடு செய்துள்ளார். இங்கே சமாதான சீர்குழைவு யாரால் ஏற்படும் ? நான் தான் சமாதான சீர்குழைவை ஏற்படுத்துவேன் என்பது போல விகாராதிபதி முறைப்பாடு செய்துள்ளார்
சட்டத்தை நடைமுறைப்படுத்துவர்களை தடுத்து சட்ட மீறல்களை பொலிஸார் செய்ய முற்படுகின்றனர்.
இது சிங்கள பௌத்த மேலாதிக்க மனநிலை ஆகும். பொலிஸாரும் பௌத்தர்களாக இருப்பதனால் பௌத்த பீடாதிபதிகளுக்கு பயந்து சட்ட மீறல்களை மேற்கொள்ள முயல்கின்றனர்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துபவர்களை தடுப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ,மேலும் தெரிவித்தார்.









No comments