முல்லைத்தீவு மாவட்டம் மணலாறு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சிங்கள பாடசாலைகளில் உதவி ஆசியர்களாக கற்பித்து வரும் சிங்கள ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க கடந்த கால அரசாங்கம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள நிலையில் , தமக்கான நியமனம் இன்னமும் வழங்கப்படவில்லை எனவும் , தமக்கான நியமனங்களை வழங்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ் , ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்
மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் முல்லைத்தீவு மாவட்டம் வெலிஓயா பிரதேசத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றி வருகிறோம்.
கடந்த அரசாங்கங்கள் எங்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்குவதாகக் கூறின, ஆனால் இதுவரை எங்களுக்கு நிரந்தர நியமனமும் , எந்தவொரு நீதியும் கிடைக்கவில்லை.
எங்கள் பகுதியில் உள்ள சிங்களப் பாடசாலைகளில் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருகிறது.
வெளி மாவட்டங்களில் இருந்து நியமனம் பெற்று எமது பகுதிக்கு வரும் ஆசிரியர்கள் எமது பிரதேசத்தில் நிலவும் கடினமான சூழ்நிலைகள் கஷ்டங்கள் காரணமாக அவர்கள் நீண்ட காலம் எங்கள் பாடசாலைகளில் கடமையாற்றுவது இல்லை. இடமாற்றம் பெற்று தங்களின் சொந்த மாவட்டங்களுக்குச் செல்லவே முயன்றனர்.
இதன் காரணமாக எங்கள் பகுதி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்குச் சரியான கல்வி கிடைக்கவில்லை.
இதன் காரணமாக, எமது மாணர்வகளுக்காக எமது பிரதேசத்தில் உள்ள கல்வி கற்ற நாங்கள் ஒன்றிணைந்து. 2018ஆம் ஆண்டில் இருந்து உதவி ஆசிரியர்களாக எமது மாணவர்களுக்கு கற்பித்து வருகிறோம்.
எமது பிள்ளைகள் கல்வி கற்க படும் இந்த அவதியை எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. குறிப்பாக அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களுக்குப் பெரும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவியது.
தகுதியான ஆசிரியர்கள் வந்தாலும் அவர்கள் அங்கு நிலைத்து நிற்கவில்லை. அது ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது.
இவ்வாறான நிலையில் தான் எமது மாணவர்களுக்காக நாம் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டோம். எமக்கான சம்பள பிரச்சனை முதல் பலதரப்பட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம்.
எங்களுக்கும் ஒரு நிரந்தர நியமனம் வேண்டும், ஒரு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடி வருகிறோம்.
எங்கள் அனைவருக்கும் நியாயம் வழங்குமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில், நாங்கள் கல்வி கற்பிக்க தகுதியற்றவர்கள் அல்ல, நாங்கள் தகுதியானவர்கள். எங்கள் தகுதியின் காரணமாகவே அன்றைய அதிகாரிகள் எங்களைச் சேவையில் இணைத்துக்கொண்டனர்
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, எங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களை உள்வாங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் (Cabinet Approval) கிடைத்தது. மாகாண மட்டத்திலும் பரிந்துரை செய்யப்பட்டது.
ஆனால், அதற்கு மேல் எங்களுக்கு எந்தவொரு முறையான பதிலும் கிடைக்கவில்லை. நாங்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும், அமைச்சரவை ஒப்புதல் கடிதம் இருந்தும் அதற்கு மேல் எந்த முன்னேற்றமும் இல்லை.
நாங்கள் படும் இந்தத் துயரங்களையும், மாணவர் படும் கஷ்டங்களையும் கருத்தில்கொண்டு, எங்களது பிரச்சினைகளை ஆராய்ந்து, எங்கள் அனைவருக்கும் நியாயமான ஒரு தீர்வை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றனர்.








No comments