Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நல்லூர் சுற்றுவீதிகள் ஆகஸ்ட் 16ஆம் திகதியுடன் மூடப்படுகிறது


வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 17ம் திகதி திங்கட்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாக யாழ் மாநகர சபையினால் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது.

யாழ் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா, யாழ் மாநகர பிரதி முதல்வர் இம்மானுவேல் தயாளன், 

யாழ் மாநகர சபை ஆணையாளர் அரவிந்தராஜ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டது.

குறித்த தீர்மானங்களின் படி,

ஓகஸ்ட் 16ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு செப்டம்பர் 13ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும்.

உற்சவ காலத்தில் வியாபார நிலையங்களில் சினிமா பாடல்களை ஒலிக்கவிடுதல் ஆடல்-பாடல் நிகழ்வுகளில் ஈடுபடுதல் போன்ற செயற்பாடுகள் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு விதிமுறைகளை மீறுபவர்களின் ஒலி-ஒளி அமைப்புச் சாதனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.

உற்சவ காலத்தில் தெய்வீக நிகழ்வுகள் சாராத காட்சிகள், காணொளிகள் அல்லது விளம்பரங்களை திரையிடுதல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.

உற்சவ காலங்களில் ஆலயச் சூழலில் படப்பிடிப்பில் ஈடுபடுபவர்கள் சமய பண்பாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகளைத் தவிர தனிநபர்களின் புகைப்படங்கள் அல்லது காணொளிகளை பதிவு செய்தல் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுதல் போன்ற நடவடிக்கைகளை முற்றாகத் தவிர்க்க வேண்டும்.

ஆலயச் சூழலில் ட்ரோன் பறக்கவிடுவது முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. இவ்விடயம் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அமுலில் உள்ளதால், அதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சிவப்பு- வெள்ளை நிறத்தால் குறிக்கப்பட்டுள்ள உற்சவப் பகுதிக்குள் வியாபாரம் செய்தல் மற்றும் யாசகம் பெறுதல் முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், வெளிப்பகுதிகளிலும் பக்தர்களின் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வியாபாரம் செய்வது அனுமதிக்கப்படாது. விதிமுறைகளை மீறி வியாபாரத்தில் ஈடுபடுபவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.

ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும் 

இந்த கலந்துரையாடலில் நல்லூர் கந்தசுவாமி ஆலய பிரதிநிதிகள், யாழ் மாநகர சபை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

No comments