வடக்கு மாகாண சபை மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும், தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தகமும் வாணிபமும் அமைச்சின் ஏற்பாட்டில், மகளிர் தின விசேட நிகழ்வுகள் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் மு.நந்தகோபாலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதரக அதிகாரி மற்றும் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்துடன், ஆளுநரின் செயலாளர், கல்வி மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்களின் செயலாளர்கள், நிதி மற்றும் திட்டமிடல் ஆகிய பிரிவுகளுக்கான பிரதிப் பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களும் பெருமளவில் பங்கேற்றனர்.
விருந்தினர்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்கப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது.
இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் வரவேற்பு நடனமும், 'பெண்மையை நேசிப்போம்' என்னும் தொனிப்பொருளிலான விசேட கலைநிகழ்வும் அரங்கேறின.
பின்னர் இடம்பெற்ற சிறப்புரைகளின் போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேராசிரியர் திருமதி சிவானி சண்முகதாஸ் அவர்கள், 'பொருளாதார விடுதலையே பெண்களின் அதிகாரம்: நெருக்கடியான சூழலில் உரிமை, சமத்துவம், நீதியை வலுவூட்டுதல்' என்னும் பொருளில் விசேட உரை ஆற்றினார்.
அதனை தொடர்ந்து அதிதிகளின் உரைகளைத் தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன், சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் தடம் பதித்துச் சாதனை படைத்த பெண் சாதனையாளர்களைப் பாராட்டி, பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.


















No comments