முகநூல் ஊடாக விளம்பரம் செய்து வாகனங்களை விற்பனை செய்த பின்னர், குறித்த வாகனங்களை மீண்டும் கொள்ளையடிக்கும் பாரிய மோசடி சம்பவம் தொடர்பில் ஒருவர் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யக்கல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூலை முதலாம் திகதி, 40 இலட்சம் ரூபாய் பணம் செலுத்தி கொள்வனவு செய்யப்பட்ட வேன் வண்டியொன்றை ஆயுதமேந்திய குழுவினர் மிரட்டி கொள்ளையடித்ததாக நபர் ஒருவர் பொலிஸ் மா அதிபர் நிவாரணப் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது, பெலும்மஹர – முந்துங்கொட பகுதியில் அமைந்துள்ள வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் உள்ளிட்ட சுமார் 10 பேர் குறித்த மோசடி நடவடிக்கையுடன் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கடந்த 13ஆம் திகதி யக்கல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர்கள் முகநூல் மூலம் வாகனங்களை விற்பனை செய்வதாக விளம்பரம் செய்து, அவற்றை கொள்வனவு செய்தவர்களை கண்காணித்து, பின்னர் ஆயுத முனையில் குறித்த வாகனங்களை மீண்டும் கொள்ளையடித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வாகன விற்பனை நிலைய உரிமையாளர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள் தற்போது தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலகெடிஹேன பகுதியில் அமைந்துள்ள வாகன விற்பனை நிலைய உரிமையாளரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, இரண்டு வாள்கள், இரண்டு பிஸ்டல் மெகசின்கள், மூன்று தோட்டாக்கள் மற்றும் ஜீப் வண்டியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதே முறையில் மேற்கொள்ளப்பட்ட மேலும் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலும் இவர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்





.jpg)



No comments