ஆளும் தரப்போடு இணைந்திருந்தாலே அவசியமானவற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்ற எதிர்பார்போடு திசைமாறிச் சென்றவர்களுக்கு திசைகாட்டி கொடுத்திருப்பது ஏமாற்றத்தை மாத்திரமே என்று ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மல்லாகம், கல்லாரை கிராமத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது.
மேலும், "ஈ.பி.டி.பி. கட்சியின் கோட்டை என்று சொல்லப்படும் அளவிற்கு ஏராளமான கிராமங்கள் யாழ் மாவட்டம் எங்கும் பரவிக் காணப்படுகின்றன.
அவ்வாறான ஈ.பி.டி.பி. கோட்டைகளுள் கல்லாரைக் கிராமமும் ஒன்று என்பது கடந்த காலங்களில் நிரூபிக்கப்பட்டிருப்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
எனினும், ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவு செய்யப்பட்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அதிகாரத்தில் இருக்கின்றவர்களுடன் இணைந்திருந்தால்தான், கிராமத்திற்கான நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற அபிப்பிராயம் ஒருசாராரிடம் உருவாகியது. அதுவே தொடர்ந்து வந்த தேர்தல்களில் ஈ.பி.டி.பி.க்கு பின்னடைவும் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு கணிசமான வாக்குகளும் கிடைப்பதற்கு காரணமாக அமைந்திருந்தது.
ஆனால், கடந்த காலங்களில், எமது கிராமங்களுக்கு கிடைத்தவைகள் அனைத்தும், டக்ளஸ் தேவானந்தா என்ற ஒருவரின் உணர்வுபூர்வமான உழைப்பினாலும், தந்திரோபாயமான அணுகுமுறைகளினாலும் கிடைத்திருந்தனவே தவிர, வெறுமனே ஆளுந்தரப்போடு இணைந்து இருந்தமையினால் கிடைக்கப் பெற்றவை அல்ல என்பதை, வெறுமையோடு கழிந்த கடந்த இரண்டு வருடங்கள் மக்களுக்கு உணர்த்துகின்றன" என்று தெரிவித்தார்.
இந்த மக்கள் சந்திப்பில், ஈ.பி.டி.பி. கட்சியின் வலி வடக்கு நிர்வாகச் செயலாளர் அன்பு, கட்சியின் வலி வடக்கு பிரதேச மேலதிக நிர்வாக செயலாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஸ்ரீதரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.









No comments