யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசத்தில் 6317 ஏக்கர் காணியை சுவீகரித்துள்ளதாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெறுவதற்கான அழுத்தத்தை வழங்குமாறு யாழ்ப்பாணம் வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் எழுத்து மூலமாக கோரிக்கையை முன் வைத்தார்கள்.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதுவர்களுக்கும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான உயர் மட்ட கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற போதே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
குறித்த கோரிக்கையில் யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் கடந்தும் பொது மக்களுடைய காணிகள் பாதுகாப்பு படைகளினால் விடுவிக்கப்படாமல் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
வலி வடக்கு மக்களின் காணிகளை பாதுகாப்பு அமைச்சினால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட வர்தமானி இதுவரை மீளப் பெறப்படவில்லை.
அத்துடன் காணிகளை பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து விடுவிப்பதற்கும் சுவீகரிப்பு வர்த்தமானியை மீளப் பெறுவதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்தனர்
கலந்துரையாடலில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, மனித உரிமைகள், நல்லாட்சி, சமூக நீதி, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபன்மை மக்களின் நீண்டகால காணி உரிமைப் பிரச்சினைகள், காணி மீட்பில் நிலவும் தாமதங்கள், காணி அபகரிப்பு, மற்றும் சுவீகரிப்பு அவற்றின் காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதார சவால்கள் தெளிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.









No comments