யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்று வரும் ''SCIVERSE 2K26' விஞ்ஞானச் செய்முறைக் கண்காட்சியைச் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்றைய தினம் புதன்கிழமை பார்வையிட்டார்.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் விஞ்ஞான மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியானது, கல்லூரியின் உயர்தரப் பிரிவு வளாகத்தில் 'பரிசோதிப்போம், ஆராய்வோம், சிறந்து விளங்குவோம்' எனும் தொனிப்பொருளில் நாளை வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சியில், க.பொ.த. சாதாரண தர (தரம் 10 மற்றும் தரம் 11) மாணவர்களின் பாடத்திட்டத்துக்குரிய அனைத்து விஞ்ஞான ஆய்வுகூடப் பரிசோதனைகளும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர்தரப் பிரிவு மாணவர்களால் உரிய விளக்கங்களுடன் நேரில் செய்துகாட்டப்படுகின்றன.
யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பாடசாலைகளையும் சேர்ந்த தரம் 10 மற்றும் 11 மாணவர்கள் இந்தக் கண்காட்சியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, ஆய்வுகூடப் பரிசோதனைகளை நேரடியாகப் பார்வையிட்டுப் பயன்பெற்று வருகின்றனர்.
மேலும், மாணவர்களுக்குப் பெரும் பயன்மளிக்கும் இவ்வாறானதொரு விஞ்ஞானச் செய்முறைக் கண்காட்சியைக் கிளிநொச்சி மாவட்டத்திலும் முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக பாடசாலை அதிபர், ஆளுநருக்குத் தெளிவுபடுத்தினார்.
அதிபரின் இந்தச் சிறந்த யோசனையை வரவேற்ற ஆளுநர், அத்திட்டத்தைக் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண சபையின் ஊடாகத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் என உறுதியளித்தார்.


















No comments