வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆறாவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேவேளை கடந்த வாரங்களில் போராட்டக்காரர்கள் பயன்படுத்தினார்கள் என பலாலி பொது நோக்கு மண்டபத்தில் காணப்பட்ட வலி. வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான குடிநீர் தாங்கி மற்றும் தற்காலிக மலசல கூடம் என்பவற்றை பலாலி பொலிஸார் அவ்விடத்தில் இருந்து எடுத்து சென்று பொலிஸ் நிலையத்தில் வைத்திருப்பதனால் , இன்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குடிநீர் மற்றும் மலசல கூடங்கள் இன்றி பல்வேறு இன்னல்களையும் அனுபவித்தனர்.
அத்துடன் , தற்காலிக கொட்டகை அமைக்கவும் , தரப்பாள் கட்ட இரண்டு தடிகளை நாட்ட கூட பொலிஸார் அனுமதிக்காததால் , கைகளினால் தரப்பாளை பிடித்தவாறு வெயிலின் கொடுமையில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொண்டு முதியவர்கள் உள்ளிட்டவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















No comments