மாறிவரும் நவீன வாழ்க்கை முறையும், டிஜிட்டல் ஊடகங்களின் அதிகரித்த ஆதிக்கமும் இளைய தலைமுறையினரின் வாசிப்புப் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆழமான வாசிப்புப் பண்பாட்டை மீளக் கட்டியெழுப்புவது காலத்தின் அவசியமாகும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் நடைபெற்று வரும் ‘யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா – 2026’ இந் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்றைய நவீன சூழலில் இளைய தலைமுறையினரின் திரைப் பயன்பாடு அதிகரித்துள்ளதன் காரணமாக, கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் புத்தக வாசிப்புப் பழக்கம் குறைவடைந்து வருகிறது.
அறிவார்ந்த சமூகத்தை உருவாக்குவதற்கும், இளைய தலைமுறையினரின் சிந்தனைத் திறனை வளர்ப்பதற்கும் வாசிப்புப் பழக்கத்தை மீண்டும் ஊக்குவிப்பது அவசியம்.
அதேவேளை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் அறிவைப் பெற்றுக்கொள்வதையும் கற்றல் செயல்முறையையும் இலகுவாக்கியுள்ளன
இணையத்தில் தகவல்களை மேலோட்டமாகப் பார்ப்பதும், ‘Copy-Paste’ முறையில் தகவல்களைப் பயன்படுத்துவதும் ஆழமான வாசிப்புக்கு ஒருபோதும் மாற்றாக அமையாது.
ஒரு புத்தகத்தை ஆழமாக வாசிப்பதன் மூலம் சிந்தனைத் திறன், பகுத்தறிவு, விமர்சன நோக்கு மற்றும் அறிவுப் புரிதல் ஆகியவை மேம்படுவதுடன், சமூகத்தில் பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்களுக்கும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களுக்கும் வாசிப்பு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது.
மேலும், தமிழ் இலக்கியங்கள், வரலாற்று ஆவணங்கள் மற்றும் எமது பண்பாட்டு மரபுகளைப் பாதுகாத்து, அவற்றை எதிர்கால சந்ததியினரிடம் கொண்டு சேர்ப்பது அனைவரினதும் பொறுப்பாகும். இத்துறைக்கு அரசாங்கம் தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது.
உள்ளூர் நூலகங்களை மேம்படுத்துதல், வாசிப்பு வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் ‘நூலகம் அறக்கட்டளை’ போன்ற டிஜிட்டல் ஆவணப்படுத்தல் முயற்சிகளுக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்
வாசிப்பு குறைந்து வருகிறது என்ற கவலையுடன் நாம் நின்றுவிடக் கூடாது. ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய வாசகர்களை உருவாக்கக்கூடிய சூழலை நாம் கட்டியெழுப்ப வேண்டும்.
அந்த வகையில், யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா ஒரு முக்கியமான முன்னெடுப்பாக அமைய வேண்டும் என தெரிவித்த அமைச்சர் இத்திருவிழாவின் ஏற்பாட்டாளர்களுக்கும் பங்கேற்பாளர்களுக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.









No comments