அஸாமில் எண்ணெய் கிணற்றில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரா்கள் இருவா் உயிரிழந்துள்ளனர்.
தின்சுகியா மாவட்டத்தில் பாக்ஜன் பகுதியில் உள்ள எண்ணெய் கிணற்றில் ஏற்பட்ட எரிவாயுக் கசிவு கடந்த 14 நாட்களாக நீடித்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் அந்தக் கிணற்றில் எதிா்பாராத விதமாக தீ பற்றியது. பல மீட்டர் உயரத்துக்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் அருகிலிருந்த வனப் பகுதி, வீடுகள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதமாகின.
இதனிடையே, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஆயில் இந்தியா நிறுவனத்தின் தீயணைப்பு துறையைச் சோ்ந்த வீரா்கள் இருவா் காணாமல்போன நிலையில், தீ பற்றி எரியும் இடத்துக்கு அருகே இருந்த நீா் நிலையிலிருந்து அவா்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
எனினும் அவர்கள் உடலில் தீக்காயங்கள் இல்லை என்றும் அவா்கள் நீா்நிலையில் குதித்ததால் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேநேரம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் ஒரு தீயணைப்பு வீரா் காயமடைந்துள்ளாா் என தெரிவிக்கப்படுகிறது.
தீயை அணைக்கும் பணியில் ஒயில் இந்தியா நிறுவனம், இராணுவம், விமானப் படை உள்ளிட்டவை கூட்டாக ஈடுபட்டுள்ளன.
சிங்கப்பூரைச் சோ்ந்த பேரிடா் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் நிபுணா்கள் மேற்பாா்வையில் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எண்ணெய் கிணற்றில் பற்றி எரியும் தீயால் சுற்று வட்டாரப் பகுதியிலிருந்து 1,600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதனிடையே உயிரிழந்த தீயணைப்பு வீரா்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வா் சா்வானந்த சோனோவால், அவா்களின் குடும்பத்தினருக்கு வேண்டிய உதவியை செய்யுமாறும் குடும்ப உறுப்பினா்களில் ஒருவருக்கு வேலை வழங்குமாறு பெட்ரோலியத் துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தாா்.
மேலும் எண்ணெய் கிணறு தீ விபத்து காரணமாக சுற்று வட்டாரப் பகுதிகளில் பாதிப்புக்குள்ளானவா்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் அவா் கூறினாா்.
No comments