கொரோனா வைரஸுக்கு சிகிச்சைப் பெற்று வரும் இந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த 5ஆம் திகதி கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்த மறுநாள் அவருக்கு காய்ச்சல் குறைந்தது. ‘2 நாட்களில் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பி விடுவேன்’ என்று கூறி அவர் ஒரு காணொலியையும் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், கடந்த 13ஆம் திகதி அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமானது. அவரது உடல்நிலையை தீவிர சிகிச்சை அளிக்கும் வைத்தியர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை குறித்து வைத்தியசாலை நிர்வாகம் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், கொரோனா சிகிச்சைப் பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையிலிருந்து மீண்டார். எஸ்.பி.பி. அவ்வப்போது கண்விழிப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நுரையீரல் தொற்றுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சீக்கிரமே உடல் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள அவருடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.









No comments