களுத்துறை மாவட்டத்தில் மாத்திரம் இதுவரையில் 55 கர்ப்பிணி தாய்மாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், அபாயமற்ற பகுதிகள் என்று கருதப்படும் இடங்களில்கூட எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கும்போது கனிசமானளவு தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் அபாய நிலைமை தீவிரமாக அதிகரித்துச் செல்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் இதுவரையில் 55 கர்ப்பிணி தாய்மாருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது.
அந்த 55 பேரில் 45 பேர் அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். பண்டாரகம பிரதேசத்தில் மாத்திரம் இது வரையில் 741 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். இவர்களில் 601 தொற்றாளர்கள் அட்டலுகமவிலுள்ளவர்கள் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டிய விடயமாகும் எனவும் அவர் தெரிவித்தார்.
இங்கு மாத்திரமின்றி காலி, பொலன்னறுவை, மத்திய மலைநாட்டில் பெருந்தோட்டப் பிரதேசங்கள் என்பவற்றிலும் தற்போது அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்குக்கூட தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் எனவே இவற்றை முறையாக முகாமைத்துவம் செய்யாவிட்டால் பாரிய பாதிப்புக்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.
No comments