தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் ஆணையத்தில் எதிர்வரும் 19ம் திகதி முன்னிலையாகுமாறு நடிகர் ரஜினிகாந்த்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது.
இதன்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
இதுவரை 23 கட்டங்கள் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், 24ஆவது கட்ட விசாரணை தூத்துக்குடியில் உள்ள விருந்தினர் மாளிகை முகாம் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
குறித்த விசாரணை ஜனவரி 19ம் திகதி தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இந்த விசாரணைக்கு முன்னிலையாகுமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் பின்னணியில் சமூக விரோதிகள் இருப்பதாக ரஜினி கூறியிருந்தார். இதுதொடர்பாக அவரிடம் ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது.
இதற்கு முன்பு ரஜினிக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டபோது அவர் நேரில் முன்னிலையாகவில்லை. ரஜினிகாந்த் நேரில் முன்னிலையாகாதது குறித்து விசாரணை ஆணையத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து அவருக்கு நேரில் முன்னிலையாவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments