மியான்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடந்து வரும் போராட்டங்களில் இதுவரை 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தெரிவிக்கும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மியான்மரில் ராணுவத்தினரால் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஆங் சாங் சூகி உட்பட முக்கிய அரசியல்வாதிகள், அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் ஆங் சாங் சூகியின் தேசிய ஜனநாயக் லீக் கட்சியினர் ஆட்சியிலிருந்த நிலையில் அந்த ஆட்சியை கவிழ்த்து ராணுவத்தினர் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
இந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு நாட்டில் இணையதள மற்றும் வங்கி சேவைகள் முடக்கப்பட்டன. அரசு தொலைக்காட்சி சேவையும் முடக்கப்பட்டுள்ளது. மக்கள் வீதிகளில் இறங்கி ராணுவ ஆட்சிக்கு எதிராகவும், சூகி உள்ளிட்ட தலைவர்களை விடுவிக்கக் கோரியும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
புதன்கிழமை மட்டும் மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் 38 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பல இளைஞர்களும் அடக்கம்.
`அனைத்தும் சரியாகிவிடும்`
இந்த போராட்டங்களில் உயிரிழந்த 50க்கும் மேற்பட்டவர்களில் 19 வயது இளம்பெண் க்யால் சின்னும் ஒருவர். இவர் போராட்டத்தில் ஈடுபட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படும் போது , “அனைத்தும் சரியாகிவிடும்” (Everything will be ok) என எழுத்துக்கள் பதிந்த டீ ஷர்ட்டை அந்த பெண் அணிந்திருந்தார். அந்த புகைப்படம் மியான்மர் மக்கள் மத்தியில் வைரலானது. அதுமட்டுமல்லாமல் க்யால் சின்னுக்கு பலர் தங்களின் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.
உயிரிழப்பதற்கு முன் அவர் தனது முகநூல் பக்கத்தில் தனது ரத்த வகை குறித்தும் தான் உயிரிழந்தால் தனது உறுப்புகள் தானம் செய்யப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
ராணுவத்துக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வரும் மக்களைத் துப்பாக்கியால் சுட்டும், கண்ணீர்ப் புகைக் குண்டை பயன்படுத்தியும் கலைக்கும் முயற்சிகளை காவல்துறையினர் எடுத்து வருகின்றனர்.
காவல்துறையினர் போராட்டக்காரர்களை கொடூர முறைகளில் கட்டுப்படுத்தும் பல வீடியோக்களும் வெளியாகின. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மியான்மரில் ராணுவத்தின் நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் தங்களின் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
சூகி மீது என்ன குற்றச்சாட்டு?
ராணுவம் ஆட்சியைக் கவிழ்த்து ஆங் சாங் சூகி உட்பட முக்கிய அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது. கைதுக்கு பிறகு சூகியின் இருப்பிடம் குறித்து தெரியாமல் இருந்த சூழ்நிலையில் சில தினங்களுக்கு முன் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களின் வழக்கு விசாரணைக்கு வீடியோ கால் மூலம் தோன்றினார் சூகி.
சூச்சி மீது சட்டவிரோதமாக வாக்கி டாக்கிகளை வாங்கியது போன்ற குற்றச்சாட்டுகளும், இயற்கை பேரழிவு சட்டங்களை மீறியது, தேர்தல் பிரசாரத்தின்போது விதிமுறைகளை மீறியது போன்ற குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டுள்ளன.
என்ன சொல்கிறது ராணுவம்?
2015-ம் ஆண்டு சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. அதன்பின் தற்போது 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அந்த கட்சி வெற்றி பெற்று நாடாளுமன்றம் கூடவிருந்த வேளையில்தான் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடந்துள்ளது. இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு ராணுவம் சொல்லும் காரணம் தேர்தலில் முறைகேடுகள் நடந்தது என்பதுதான்.
2015-ம் ஆண்டு பெற்ற வெற்றியைக் காட்டிலும் 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பெரிதான ஒரு வெற்றியைத் தான் சூகியின் தேசிய ஜனநாயக் லீக் கட்சி பெற்றது. இந்த தேர்தலில் அவர்கள் 83 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தனர். இருப்பினும் ஆட்சிக் கவிழ்ப்பு செய்துள்ள ராணுவம், இப்போது அதிகாரத்தை ராணுவத் தலைவர் ஜெனரல் மிங் ஆங் லெய்ங்கிடம் ஒப்படைத்துள்ளது.
ஓய்வுப் பெறும் தருவாயை நெருங்கும் ஜெனரல் மிங் ஆங் லெய், நியாயமான ஒரு தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெறும் கட்சியிடம் ஆட்சியை ஒப்படைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஐ.நா இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் என பல்வேறு நாடுகள் ராணுவத்தினரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.
பர்மிய தமிழர்கள்
மியான்மரின் ஆட்சிக் கவிழ்ப்பு குறித்துப் பேசும்போது மியான்மரின் பர்மிய தமிழர்கள் குறித்து பேச வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. ராணுவத்தால் ஆட்சிக்கவிழ்ப்பு என்பது மியான்மருக்கு ஒன்று புதியதல்ல. இதற்கு முன்பு நடந்த ராணுவ ஆட்சியால் பல லட்சம் பர்மிய தமிழர்கள் தங்கள் சொத்துக்களை இழந்துள்ளனர். ஒடுக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறும் சூழலும் ஏற்பட்டது.
19ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் அப்போது பர்மா என்று அழைக்கப்பட்ட தற்போதைய மியான்மருக்கு தமிழர்கள் சென்று வணிகம் மற்றும் விவசாயம் மேற்கொண்டு வந்தனர். ஆனால் பர்மா பிரிட்டனிடமிருந்து 1948-ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு எல்லாம் மாறியது.
மியான்மரில் 1962-ம் ஆண்டு அப்போதைய ராணுவத் தலைவர் நி வின் தலைமையில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்து அதிகாரம் ராணுவத்திடம் சென்றது. அவர் நாட்டில் சிறுபான்மை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
நிலச்சீரமைப்புகளும், பர்மிய மொழி திணிப்பும், உள்ளூர் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட முன்னுரிமையும் அங்குள்ள தமிழர்களின் வாழ்க்கையைத் துயரமாக்கியது.
அரசுடைமையாக்கத் தமிழர்களின் விவசாய நிலங்களும், சொத்துக்களும் எடுத்துக் கொள்ளப்பட்டன. பல லட்சம் தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேறினர்.
செய்தி மற்றும் புகைப்படம் நன்றி :- விகடன்.
No comments