சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் உடல்நலக்குறைபாட்டால் சிகிச்சைப் பெற்றுவந்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி (வயது 87) இன்று காலமானர்.
உதவும் கைகளே கோயில், எதிர்பார்ப்பில்லா இதயமே தெய்வம் என்பதற்கு ராமசாமி நடமாடிய உதாரணம். சென்னை சாலைகளின் நீள அகலங்கள் அத்தனையிலும், தினம் தினம் எந்த லாபமும் பாராமல் அவராக ஏதேனும் சாலையில் வந்து நின்று டிராஃபிக்கை சரி செய்ய ஆரம்பித்ததால் அவரது பெயர் டிராஃபிக் ராமசாமி என்றானது.
அநீதிக்கு எதிராகப் பொதுநல வழக்குகள் போடும் சட்டப்போராளி. சட்ட விதிமுறைகளை மீறி சென்னையில் கட்டப்பட்ட பல கட்டடங்களை வழக்குத் தொடுத்து இடித்துக் காட்டியவர். கண் முன்னால் என்ன தவறு நடந்தாலும் பயப்படாமல் துணிந்து நீதிமன்றம் ஏறிய இவர் வக்கீல் வைக்காமல் தானே வாதாடிக்கொண்டார். அப்படி இவர் கோர்ட் ஏறி கொண்டுவந்த வெற்றிகள் பல. சென்னை மட்டுமல்லாது தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் டிராஃபிக் ராமசாமி. சட்டத்துக்குப்புறம்பாக பேனர் வைப்பவர்களை விடாமல் விரட்டியடித்தவர் இவர்.
எந்த சன்மானமும் வாங்காமல் சமூகப் பணிகளை தொடர்ந்து செய்துவந்த ராமசாமியின் மறைவு தமிழக மக்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
No comments