புலிகளுடனான போர் நடத்தப்பட்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே மங்கள அமைச்சுப் பதவியை இழந்தார் என்றும் மங்களவின் மரணம் நம் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியா பாரிய இழப்பு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரங்கல் செய்தியிலேயே அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கையில்,
மங்கள சமரவீரவின் எதிர்பாராத மறைவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
“1989இல் அரசியலில் கால்பதித்த மங்கள சமரவீர, 1994 இல் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமார துங்கவின் அரசாங்கத்தில் அமைச்சராக பொறுப்பேற்றார்.
மேலும் தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காக பிரசாரம் செய்யும் ´சுது நெலும்´ இயக்கத்தினையும் முன்னெடுத்துச் சென்றார். அவர் இறக்கும் வரையிலும் இனவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்திருந்தார்.
சமரவீர, புலிகளுடனான போர் நடத்தப்பட்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் தனது அமைச்சரவை பதவியினை இழக்க நேரிட்டது.
பின்னர் அவர் 2015இல் வெளிவிவகார அமைச்சராக மீண்டும் பதவியேற்று, நீதி, பொறுப்பு மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி அயராது உழைத்தார்.
இன, மொழி, சாதி, மதம், அல்லது நம்பிக்கை வேறுபாடுகளாலுக்கு அப்பால் ஒவ்வொரு குடிமகனும் சமமாக நடத்தப்படும் ஒரு இலங்கையே அவரது தரிசனமாக காணப்பட்டது.
மங்கள சமரவீரவின் மரணம் நம் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியா பாரிய இழப்பாகும்” என தெரிவித்துள்ளார்.
No comments