கொரோனா தடுப்பு மருந்து என ஒரு வகையான பாணியை தயாரித்திருந்த தம்மிக்க பண்டார, கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளார்.
கேகாலை பகுதியை சேர்ந்த சித்த மருத்துவரான தம்மிக்க பண்டார, தனது கனவில் வந்த காளியம்மனின் உத்தரவில் , இந்த பாணி மருந்தை தயாரித்ததாகவும் , அப்பாணியை பருகினால், கொரோனா தொற்றுவதை தடுக்குமென பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்.
தம்மிக்க பண்டார தயாரித்த இந்தப் பாணத்தை, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஆகியோரும், ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் பருகியிருந்தனர். எனினும், அவர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை தம்மிக்க பண்டாரவின் பாணியை பெற்றுக் கொள்வதற்காக அவரின் வீட்டுக்கு முன்பாக பல்லாயிரக் கணக்கானோர் ஒரே நேரத்தில் ஒன்றுகூடினர். தனது வீட்டின் முன்பாக குழுமியிருந்தவர்களுக்கு தம்மிக்க பண்டார, கால் போத்தல்களில் அடைத்த பாணியை இலவசமாக விநியோகித்தார். அந்நிலையில் “தம்மிக்க பாணி கொத்தணி” உருவாகிவிடுமோ என்றோர் அச்சமும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தம்மிக்க பண்டாரவின் தயாரிப்புக்கு மருத்துவ பானமாக அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ள போதும், கொரோனா எதிர்ப்பு மருந்தாக அங்கிகாரம் வழங்கப்படவில்லை என, ஆயுர்வேத ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தம்மிக்க பண்டார, கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட படமும் சமூக வலைத்தளத்தளங்களில் தற்போது வைரலாகியுள்ளது.







No comments