மன்னர் விடத்தல் தீவு பகுதியில் கும்பல் ஒன்று வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் வீட்டில் இருந்த குடுப்பஸ்தரும் , இரு பெண்களும் படுகாயமடைந்துள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் , விடத்தல் தீவு 5 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மாலை 6.30 மணி அளவில் மது போதையில் அத்துமீறி நுழைந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் குறித்த வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் கடுமையாக தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
குறித்த தாக்குதலில், வீட்டின் உரிமையாளரான அன்ரனி ஜோசப் (வயது-44) என்பவர் படுகாயமடைந்து, சுயநினைவை இழந்த நிலையில், பள்ளமடு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேவேளை வீட்டிலிருந்த இதய நோயாளியான 18வயது யுவதி ஒருவரையும்,15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரையும் குறித்த கும்பல் தாக்கியதில், காயமடைந்த இருவரும் பள்ளமடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கும்பலின் தாக்குதலில் வீடு கடுமையாக சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அடம்பன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
No comments