நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை லொனெக் மாட்டு பண்ணைக்கு நீர் வழங்கும் அணைக்கட்டில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி பரிதாபமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (19) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் லொனெக் மீனாட்சி பிரிவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சின்னையா ராஜா (வயது36) மற்றும் சிலாபம் பகுதியிலிருந்து வேலைக்காக வருகை தந்து அப்பகுதியில் தங்கியிருந்த சச்சிந்த தில்ஷான் (வயது 21) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் , லொனெக் பகுதியில் வேலை செய்து வந்துள்ளனர். நேற்றைய தினம் தமது வேலைகளை முடித்துக்கொண்டு குளிப்பதற்காக குறித்த குளத்திற்கு மேலும் இரண்டு பேருடன் சென்றுள்ளனர்.
அப்போது ராஜா என்ற நபர் முதலில் குளத்தில் குதித்துள்ளார். அவர் நீரில் மூழ்குவதனை கண்ட அவரது நண்பர் தில்ஷான் அவரை காப்பாற்றுவதற்காக குதித்த போதே இருவரும் நீரில் மூழ்கியதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.
இருவரையும் நேற்றைய தினம் பிரதேசவாசிகள் குளத்தினுள் தேடிய போதிலும் அவர்கள் இருவரும் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து பொலிஸாருக்கும், இராணுவத்திற்கும் அறிவித்ததனை தொடர்ந்து இன்று (20) சுழியோடிகளால் குறித்த இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.
இருவரின் சடலங்கள் வைத்திய பரிசோதனைக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்ட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments