அத்தியாவசியமற்ற பொருள்களை இறக்குமதி செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி விதித்த நிதி வைப்பு கட்டுப்பாடுகளை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை நீக்கியவுடன், வணிகங்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய வங்கி தலைமை அலுவலகத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் தலைமையில், அடுத்த ஆறு மாதங்களுக்கான இலங்கையின் எதிர்கால பொருளாதாரத் திட்டம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
நாட்டின் அனைத்து முக்கிய துறைகளையும் உள்ளடக்கிய இந்த ஆறு மாத திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அஜித் நிவர்ட் கப்ரால் கூறினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, 623 அத்தியாவசியமற்ற பொருள்களுக்கு கடுமையான இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இலங்கை பொருளாதாரம் எதிர்கொள்ளும் கடுமையான டொலர் இருப்பு பற்றாக்குறை காரணமாக இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இலங்கையில் தற்போது 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டு இருப்பு இருகின்றது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ரால் குறிப்பிட்டார்.
No comments