உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கீரியங்கள்ளி பிரதேசத்தில் நேற்று (10) இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நான்கு பேர் வெட்டுக் காயங்களுக்குள்ளான நிலையில் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடப்பு பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
கீரியங்கள்ளி பகுதியில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் நேற்று (10) இரவு சகோதரர்கள் இருவர் உள்ளிட்ட சிலர் மது அருந்திவிட்டு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர், அது பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.
அதன்போது இருவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் வெட்டப்பட்டு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அது தொடர்பில் பொலிஸ் அவசர பிரிவுக்கு (119) அழைப்பை ஏற்படுத்தி அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த தகவலுக்கு அமைய உடப்பு பொலிஸ் நிலைய பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது, அங்கு மதுபோதையில் இருந்தவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதில், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டதில் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதனையடுத்து, காயத்துக்குள்ளான இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட நான்கு பேரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
அதேவேளை சம்பவம் தொடர்பில் இருவரை கைது செய்துள்ளதாக உடப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
No comments