மக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளவில்லை என்றால் எதிர்காலத்தில் படுமோசமான நிலைக்கு நாடு செல்லும் என எச்சரித்துள்ள பொதுசுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கைக் குறைந்திருந்தாலும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் மாகாணங்களுக்கு இடையிலானப் பயணக்கட்டுபாடுகள் நீக்கப்பட்டாலும், மக்கள் ஒன்று கூடுவதற்கு, நிகழ்வுகளை நடத்துவதற்குள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து காணப்படும் எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்படவில்லை. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இனங்காணப்படாத பல தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம். நாட்டின் பல பிரதேசங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவில் இனங்காணப்படுகிறார்கள். குறிப்பாக அநுராதபுரம், தென் மாகாணங்களில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள். இந்த நிலைமை நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் ஏற்படலாம் எனவும் தெரிவித்தார்.
சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை முறையாக பின்பற்றாவிட்டால் எதிர்காலத்தில் படுமோசமான நிலைமை ஏற்படலாம். கொரோனா வைரஸ் தடுப்பூசிகள் அதிகளவானோருக்கு செலுத்தப்பட்டுள்ளதால் உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments