கொழும்பு- புதுக்கடையைச் சேர்ந்த மூன்று சிறுமிகளும் நடன நங்கையர்களாக மாற வேண்டும் என்ற ஆசையிலேயே கடந்த திங்கட்கிழமை வீட்டை விட்டு வெளியேறி மறுநாள் செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு திரும்பினார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளின் பின்னர் கருத்துத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் நிஹால் தல்துவ தெரிவித்திருந்ததாவது,
குறித்த சிறுமிகள் மூவரும் நடன நங்கையர்களாக மாற வேண்டும் என்ற ஆசையில் நவம்பர் 8ஆம் திகதி அதிகாலை இரகசியமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
தமது கையில் இருந்த 2 மோதிரங்களை அடகு வைத்து 60 ஆயிரம் ரூபாயைப் பெற்ற அவர்கள், ஃபேஷன் பக் என்ற ஆடை விற்பனை நிலையத்துக்குச் சென்று ஜீன்ஸ், ரி சேர்ட்கள் மற்றும் பிற உடைகளை வாங்கியுள்ளனர்.
ஏனெனின், அவர்கள் அணிந்திருந்த உடையுடன் சென்று நடனக் குழுவில் அல்லது வகுப்பில் சேர வாய்ப்பில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர் என்று தெரிவித்த அவர், சிறுமிகள், தமது கனவுகள் மற்றும் இலட்சியங்களின் அடிப்படையில் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளனர்.
ஆடைகளை மாற்றியவுடன், வத்தளையில் உள்ள நடனக் குழுவில் சேர முயற்சித்து, முயற்சி தோல்வியடைந்ததால் அநுராதபுரம் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர். சிறுமிகளைப் பார்த்து சந்தேகமடைந்த பஸ் நடத்துனர், அவர்களை கொழும்புக்கு அழைத்து வந்துள்ளார்.
நடனக் குழுவில் இணைவதற்கான முயற்சி தோல்வியடைந்த பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைருமான சஜித் பிரேமதாசவிடம் உதவி பெறுவதற்கு சிறுமிகள் முயன்றுள்ளனர்.
சிறிகொத்தவுக்கு உதவி கேட்டுச் சென்ற சிறுமிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யாரும் இல்லை என்று பாதுகாப்பு அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டதையடுத்து, சஜித் பிரேமதாஸவின் அலுவலகத்துக்குச் சென்றுள்ளனர்.
அங்கு அவர் இல்லாததால் அவர்கள் மீண்டும் திரும்பியுள்ளனர்.
பெண்கள் மிகவும் "கண்டிப்பான மற்றும் பழமைவாத" வீடுகளில் வசிக்கும் சிறுமிகள் மூவரும், இசையைக் கேட்கவோ அல்லது தொலைக்காட்சியைப் பார்க்கவோ அனுமதிக்கப்படவில்லை.
சிறுமிகள் பாதிப்பில்லாமல் இருப்பதாகத் தெரிந்தாலும் அவர்களை மன மற்றும் உடல் தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதால் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளனர் என தெரிவித்த அவர், இவ்விடயம் தொடர்பில் தான் கவலை அடைவதாகவும் நட்சத்திரங்களாக வேண்டும் என்ற தங்கள் கனவுகளை சிறுமிகள் பின்பற்றுகின்றனர் என்றும் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.
No comments