சப்புகஸ்கந்தையில் பயணப்பொதிக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபரை வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாளிகாவத்தை பகுதியை சேர்ந்த பாத்திமா மும்தாஜ் (வயது 44) என்பவர் கடந்த 4ஆம் திகதி சப்புஸ்கந்த பகுதியில் குப்பை மேட்டில் அநாதரவாக கிடந்த பயணப்பொதி ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கடந்த 6ஆம் திகதி மட்டக்குளி பகுதியை சேர்ந்த தம்பதியினரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட தம்பதியினரை மறுநாள் 07ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தி 48 மணி நேர பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி பெற்று இருந்தனர்.
அதன் அடிப்படையில் தம்பதியினரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணையில் அவர்களிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் பிரதான சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரினால் , படுகொலை செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க சங்கிலி , ஒரு ஜோடி தோடுகள் , தங்க மோதிரம் என்பன கொழும்பு ஹெட்டி வீதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் 1 ஒரு இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அந்நகைகள் அனைத்தும் உருக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதேவேளை பெண்ணை படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்ட உலக்கை மற்றும் சடலத்தை அப்புறப்படுத்த பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி என்பவற்றையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
No comments