மட்டக்களப்பில் உள்ள வீடொன்றில் கூலி வேலைக்கு சென்ற தந்தையும் மகளும் வீட்டு உரிமையாளரின் மனைவியை படுகொலை செய்து விட்டு தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்ற சமயம் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு அரசடி , பார் வீதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை மதியம் நடைபெற்ற குறித்த சம்பவத்தில் தயவாதி செல்வராசா (வயது 50) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவுருவதாவது,
குறித்த பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் வழமையாக கூலி வேலைக்கு வரும் தந்தையும் மகளும் , இன்றைய தினமும் வழமை போன்று வேலைக்கு வந்துள்ளனர்.
வேலை முடிந்த பின்னர் , தமக்கு பசிக்கிறது , உணவு தாருங்கள் என கேட்டு வீட்டு உரிமையாளரின் மனைவியிடம் உணவு வாங்கி உண்டுள்ளனர்.
உணவு உண்ட பின்னர் , உரிமையாளரின் மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்து விட்டு , அவர் அணிந்திருந்த தாலி உள்ளிட்ட தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
கைகளில் அணிந்திருந்த காப்பினை கழட்ட முயன்ற போது , காப்பு கழற்ற முடியாது இருந்தமையால் கையை மணிக்கட்டுடன் துண்டாக்கி காப்பினை கொள்ளையடித்துள்ளனர்.
பெண்ணை படுகொலை செய்து , கொள்ளையிட்ட நகைகளுடன் குறித்த வீட்டில் இருந்து இருவரும் ஆடைகளில் இரத்த கறைகளுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் வெளியே வருவதனை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கண்ணுற்று , அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளார்.
அவ்வேளை அவ்விடத்தில் கூடியவர்கள் இருவரையும் மடக்கி பிடித்து , பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது , வீட்டு உரிமையாளர் இரத்த வெள்ளத்தில் கை துண்டாடப்பட்ட நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
அதனை அடுத்து இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
No comments