நாட்டில் மேல் மாகாணத்தில் மட்டும் சுமார் 671 யாசகர்கள் உள்ளதாகவும், அவர்களில் யாசகம் பெறுவதனை கைவிடவும், முதியோர் இல்லங்களில் தஞ்சமடைவும் 104 பேர் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த யாசகர்களில் பெரும்பாலானவர்கள் யாசகம் பெறுவதனை தொழிலாக செய்து வருகின்றனர் என்பது பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரை பயன்படுத்தி மேற்கொண்ட விசேட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
321 யாசகர்களுக்கு பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இருக்கின்றனர். இவர்களில் 274 பேர் திருமணம் செய்தவர்கள். அடையாளம் காணப்பட்டுள்ள 671 யாசகர்களில் 193 பேர் பெண்கள் ஆவார்கள்.
மேலும் அவர்களில் 509 யாசகர்கள் மேல் மாகாணத்தை வதிவிடமாக கொண்டவர்கள். இவர்களில் வடக்கு, கிழக்கில் இருந்து வந்த நான்கு யாசகர்கள் இருக்கின்றனர். ஏனையோர் மத்திய, சபரகமுவை, தென், வடமேல், ஊவா, வடமத்திய மாகாணங்களில் இருந்தும், மேல் மாகாணத்தில் குடியேறியவர்கள்.
இந்த யாசகர்களுக்கு குற்றச் செயல்களில் தொடர்புள்ளதா என்பதை அறிய மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் உத்தரவின் பேரில், யாசகர்களின் கைவிரல் அடையாளங்களை பெறவும் பொலிஸ் நிலையங்களில் கோப்புகளை கையாளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments