வேகக்கட்டுப்பாட்டை இழந்து கனரக வாகனம் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதுடன் சிறுவனின் தாய் மற்றும் ஒரு வயதான சகோதரன், ஆட்டோ சாரதி ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து தலைமன்னார் ஓலை தொடுவாய் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மன்னார் கொண்ணையன் குடியிருப்பைச் சேர்ந்த குடும்பம் ஒன்று, ஓலைத்தொடுவாய் வீதிக்கூடாக முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிய போது, பின் புறமாக தலைமன்னார் பகுதியிலிருந்து மன்னார் நோக்கி வேகமாக வந்த மீன் ஏற்றும் கனரக வாகனம் குறித்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் முச்சக்கர வண்டியும், பயணித்தவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
முச்சக்கர வண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகி வீதிக்கு அருகாமையில் வெள்ள நீருக்குள் வீசி எறியப்பட்ட நிலையில் காணப்பட்டது.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சந்தியோகு செல்வி (வயது- 30), அவரது மகன்களான கெபின் கரன் (வயது -6), கானோர் ( வயது- 1) மற்றும் ஆட்டோ சாரதியும் பலத்த காயங்களுடன் பேசாலை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டு, பின் தீவிர சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் மகன் கெபின்கரன் (வயது -6) மன்னார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.
ஏனைய மூவரும் தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். குறித்த கனரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments