சிறுமியுடன் சேட்டை விட்டவர்களிடம் நியாயம் கேட்க யாழில் இருந்து முல்லைத்தீவு சென்றவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிய வருகிறது.
யாழில். இருந்து வாகனம் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி பெண் உள்ளிட்ட 13 பேர் முல்லைத்தீவு அளம்பில் பகுதிக்கு சென்ற போதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் இரு பகுதியை சேர்ந்தவர்களிலும் ஆறுபேர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
காங்கேசன்துறை மயிலிட்டி பகுதியை சேர்ந்த குடும்பம் ஒன்று முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் உள்ள உறவினர் வீடொன்றுக்கு சென்று தங்கியுள்ளனர்.
அவ்வாறு யாழில் இருந்து சென்று தங்கிய குடும்பத்தை சேர்ந்த சிறுமியுடன் , அளம்பில் பகுதியை சேர்ந்த இளைஞன் சேட்டை புரிந்துள்ளார். அதனால் அங்கு குறித்த குடும்பத்தினர் வாக்கு வாதப்பட்டு , ஊர் திரும்பியுள்ளனர்.
ஊர் திரும்பியவர்கள் தமது உறவினர்களிடம் சம்பவம் தொடர்பில் தெரிவித்ததை அடுத்து , உறவினர்கள் வாடகைக்கு வாகனம் ஒன்றினை அமர்த்தி அளம்பிலுக்கு நியாயம் கேட்க சென்றுள்ளனர்.
யாழில் இருந்து வாகனத்தில் குழு ஒன்று அளம்பிலுக்கு வருவதனை முன்னரே அறிந்து கொண்டவர்கள் அளம்பிலில் தாக்குதலுக்கு தயார் நிலையில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் இருந்துள்ளனர்.
யாழில் இருந்து சென்றவர்கள் அளம்பில் பகுதியில் இறங்கியதுமே ஏற்கனவே தாக்குதலுக்கு தயார் நிலையில் இருந்தவர்கள் அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்தவர்கள் , பின்னர் திருப்பி தாக்க தொடங்கியுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில் இரு தரப்பினை சேர்ந்த 06 பேர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு தரப்பினரும் மோதிக்கொள்வது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தர தாமதித்து உள்ளனர்.
அதேவேளை குறித்த பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஏற்கனவே சில தரப்பினரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதிலும் அவர்கள் அது தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை எனவும் பொலிஸார் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
No comments