பாராளுமன்றத்துக்கு எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இராணுவ வீரர்கள் குழுவுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் உடனடியாக சுயாதீன விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற இராணுவத்தினரை துன்புறுத்திய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்துமாறு இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தின் மோட்டார் சைக்கிள் குழுவின் நான்கு மோட்டார் சைக்கிள்கள் பாராளுமன்ற வளாக வீதித் தடையை அண்மித்த போது, தவறாக நடந்து கொண்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை நடத்தி அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறே இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments