மட்டக்களப்பில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 06 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் நீதிமன்ற உத்தரவில் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஊத்துமடு பாவக்கொடிசேனை பிரதேசத்தில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தி செய்யப்பட்டு , விற்பனை செய்யப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , பொலிஸார் குறித்த வீட்டினை சுற்றி வளைத்தனர்.
அதன் போது வீட்டில் இருந்த இளைஞன் ஒருவரை கைது செய்ததுடன் , அவரிடம் இருந்து 2 லீட்டர் கசிப்பையும் பொலிஸார் மீட்டனர்.
அதனை அடுத்து கைது செய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் வாகனத்தில் ஏற்ற முற்பட்ட வேளை இளைஞனின் சகோதரிகள் உள்ளிட்ட உறவினர்கள் , அயலவர்கள் பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து , பொலிஸார் மீதும் பொலிஸ் வாகனம் மீதும் தாக்குதலை மேற்கொண்டனர்.
அதன் போது ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து , பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இளைஞன் பொலிஸ் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளார். அவரை பொலிஸார் துரத்தி பிடித்தனர்.
அதனை தொடர்ந்து பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை , பொலிஸாரை தாக்கியமை மற்றும் பொலிஸாரின் வாகனத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் 06 பெண்கள் உள்ளிட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 12 பேரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
No comments