தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, இராணுவத்தினரின் பூரண ஒத்துழைப்பில் 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை பிரதிஸ்டை செய்வதற்கும் , அங்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரையின் கலசத்திற்குரிய விசேட பூசைவழிபாடுளை மேற்கொள்வதற்குமான நூற்றுக்கணக்கணக்கான பௌத்தபிக்குகள் மற்றும், இராணுவத்தினர் பௌத்தாலோக நற்பணிமன்றம், தென்னிலங்கையைச்சார்ந்த பெரும்பாண்மை இனத்தவர்கள் ஆகியோர் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
குறித்த முயற்சி தமிழ் மக்கள் மற்றும், மக்கள் பிரதிநிதிகளின் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குருந்தூர் மலை தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்குவிசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
அவ்வாறு இடம்பெற்ற வழக்கு விசாரணைக்கு அமைவாக, குருந்தூர்மலையில் எவ்வித மதக்கட்டுமானங்களும் மேற்கொள்ளக்கூடாதென முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் உத்தரவிடப்பட்டிருந்தது.
இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவினை மீறி அங்கு தொல்பொருள் அகழ்வாராட்சி என்னும் போர்வையில் புதிதாக பாரிய அளவில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவ்வாறு அமைக்கப்பட்ட புதிய விகாரைக்குரிய விசேட பூசை வழிபாடுகளை மேற்கொள்வதற்கும், 'கபோக்' கல்லினால் ஆன புத்தர் சிலையொன்றினை குருந்தூர் மலையில் நிறுவுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியே இவ்வாறு தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டது.
குறிப்பாக கடந்த பல நாட்களுக்கு முன்பிருந்தே இந்த விசேட வழிபாடுகளுக்குரிய ஏற்பாடுகளில் முப்படையினர் இணைந்து முன்னெடுத்திருந்தனர். இருப்பினும் இன்றையதினம் முப்படையினர் இராணுவ உடையின்றி, சிவில் உடைகளில் இந்த வழிபாடுகளுக்குரிய செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த விசேட வழிபாடுகளுக்கு தென்னிலங்கையில் இருந்து பெருந்திரளான பெரும்பாண்மை இனத்தவர்களும் பௌத்த பிக்குகளும் அதி சொகுசுவாகனங்கள் மற்றும் பேருந்துகள் மூலம் வருகைதந்திருந்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்திற்கென வருகைதந்த மூவரை வழிமறித்த பொலிஸார் அவர்களைத் தாக்கி கைதுசெய்து, பின்னர் விடுவித்திருந்தனர்.
No comments