நான் எப்போதும் ஜனநாயக ரீதியில் செயற்படுகிறேன். அரசியலமைப்பின்படி செயல்படும் நான் அதற்கு புறம்பாக ஒருபோதும் செயல்படமாட்டேன் என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், பதில் ஜனாதிபதியாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பதில் ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள இந்த குறுகிய காலத்துக்குள் நான் சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளேன். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு தேவையான பின்னணியை இந்த சில நாட்களில் செய்து தரப்படும்.
´அதிமேதகு´ என்ற சொல்லுக்கு தடை விதிக்கின்றேன். நாட்டுக்கு தேசியக்கொடி மட்டும் போதும். ஜனாதிபதி கொடி இரத்து செய்யப்படுகின்றது. அரசியலமைப்புக்கு அப்பால் சென்று செயற்பட நான் தயாரில்லை.
பாராளுமன்ற ஜனநாயகத்தை இல்லாதொழிக்க எந்த குழுவுக்கும் இடமளிக்கமாட்டேன். போராடும் உரிமை உள்ளது. ஆனால் வன்முறையை அனுமதிக்க முடியாது. போராட்டக்காரர்களுக்கும், கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. போராட்டக்காரர்கள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுபவர்கள்.
நாம் வாழ்வதற்கும், அரசியல் செய்வதற்கும் நாடு அவசியம். எனவே, நாடு குறித்தும், மக்கள் பற்றியும் சிந்தித்து செயற்படுமாறு கட்சிகளிடம் கேட்டுக்கொள்கின்றேன். முதலில் நாட்டை மீட்போம். அதன் பிறகு அரசியல் செய்வோம்.
எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெற உள்ள புதிய ஜனாதிபதி தெரிவில் செல்வாக்கு செலுத்தி வருகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும், பாராளுமன்றத்தின் பாதுகாப்பையும் பேண, பதில் ஜனாதிபதி என்ற வகையில் நடவடிக்கை எடுப்பேன்.
நான் எப்போதும் ஜனநாயக ரீதியில் செயற்படுகிறேன். அரசியலமைப்பின்படி செயல்படும் நான் அதற்கு புறம்பாக ஒருபோதும் செயல்படமாட்டேன்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உணவு, எரிபொருள், எரிவாயு, மின்சாரம் வழங்குவது கடினம். எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைவரும் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றுபடுவோம் என்றார்
No comments