வங்கி ஊழியர்களின் முறையற்ற நடவடிக்கையினால் , எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டதுடன், வரிசையில் காத்திருந்தவர்கள் கடும் விசனத்திற்கு உள்ளாகி இருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள அரச திணைக்களங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன் அடிப்படையில் எரிபொருள் விநியோகம் உரிய முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அதிகாலை முதல் வரிசையில் பலர் காத்திருந்த போது, பிற்பகல் 4.30 மணியளவில் வரிசையின் இறுதியில் காத்திருந்த சுமார் 25 க்கும் மேற்பட்ட தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்கள் வரிசையைக் குழப்பி எரிபொருள் பெற்றுச் சென்றனர்.
அதுவரையில் ஒழுங்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்களும், அரசாங்க ஊழியர்களும் வங்கி ஊழியர்களுடன் வாக்குவாத்த்தில் ஈடுபட்ட போதிலும், எதையும் பொருட்படுத்தாமல் அவர்கள் எரிபொருளை பெற்று சென்றனர்.
குறித்த வங்கி ஊழியர்கள் இடையில் புகுந்து எரிபொருள் பெற்று சென்றமையை அவதானித்த ஹற்றன் நஷனல் வங்கி ஊழியர்களும் வரிசையைக் குழப்பி கட்டுப்பாடுகள் ஏதுமின்றி எரிபொருள் பெற்று சென்றனர்.
வங்கி ஊழியர்களின் இத்தகைய நடவடிக்கை அங்கு பல மணிநேரம் காத்திருந்த அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையில் கடும் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.
No comments