சிறுவனிடம் இருந்து 100 ரூபாய் பணத்தினை அபகரிப்பதற்காக சிறுவனை வெட்டிக் காயப்படுத்திய குற்றத்தில் பொலிஸாரினால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை கந்தகெட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் காயமடைந்த 7 வயது சிறுவன் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவனுக்கு சுமார் 7 மணிநேரம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் , தற்போது சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சிறுவன் தனது தந்தையின் கையடக்க தொலைபேசிக்கு மீள் நிரப்பு அட்டை வாங்க 100 ரூபாய் பணத்துடன் சென்றதாகவும் , அந்த சிறுவனை வீதியில் வழி மறித்தவர் 100 ரூபாயை தருமாறு கோரி சிறுவனை தாக்கி , கூரிய ஆயுதத்தால் சரமாரியாக வெட்டி காயப்படுத்தி விட்டு அருகில் இருந்த காட்டுப்பகுதிக்குள் ஓடி தலைமறைவாகியுள்ளார்.
குறித்த நபரின் தாக்குதலுக்கு இலக்கான சிறுவனை பிரதேச வாசிகள் மீட்டு , வைத்திய சாலையில் அனுமதித்ததுடன் , பொலிஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காட்டிற்குள் ஓடிய நபரை , பிரதேச வாசிகளின் உதவியுடன் தேடினர்.
அதன் போது , காட்டிற்குள் இருந்த நபர் பொலிஸார் மற்றும் பிரதேச வாசிகள் மீது கற்களை வீசி தாக்குதல் நடாத்தி விட்டு தப்பியோடும் வேளை தவறி விழுந்துள்ளார்.
உடனே விரைந்து செயற்பட்ட பிரதேச வாசிகளும் பொலிஸாரும் குறித்த நபரை மடக்கி பிடித்தனர்.
குறித்த நபரை கைது செய்த பொலிஸார் அவரிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments