டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை புரிந்தார் என குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளியாக கண்ட டெல்லி சூரஜ்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியதுடன், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு 75 வயது முதியவர் திருமணமான தன் மகளைப் பார்க்க டெல்லியின் நொய்டா பகுதிக்கு சென்றுள்ளார்.
அப்போது, மகளின் பக்கத்து வீட்டு 3 வயது சிறுமியிடம், சாக்லேட் வாங்கி தருவதாகக் கூறி சிறுமியைத் தனியே அழைத்துச் சென்று, டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
அது தொடர்பில் சிறுமி, பெற்றோரிடம் கூறியதை அடுத்து பெற்றோரால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேக நபரான முதியவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர்.
அதனை அடுத்து நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகளில் சாட்சியங்கள் , ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேகநபரை குற்றவாளியாக கண்ட, சூரஜ்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியதுடன் 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீப்பளித்தது.
இதே போன்ற சம்பவத்தில், ஏழு மாதப் பெண் குழந்தையை டிஜிட்டல் முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக நொய்டாவைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
அதேவேளை கடந்த ஆண்டில், 80 வயதான கலைஞர் ஒருவர் ஒரு சிறுமியை ஏழு ஆண்டுகளாக டிஜிட்டல் முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இந்தியாவில் டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை வழக்கில் வழங்கப்பட்ட முதல் தண்டனை, 75 வயது முதியவருக்கு வழங்கப்பட்ட தண்டனை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்றால் என்ன?
டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை என்பது, ஒருவருடைய அந்தரங்க உறுப்பில் சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி கை மற்றும் கால் விரல்களை நுழைப்பது.
ஆங்கிலத்தில் டிஜிட் என்பது விரல்களைக் குறிக்கிறது. எனவே, இந்தக் குற்றத்துக்கு 2012-ம் ஆண்டு முதல் `டிஜிட்டல் பாலியல் வன்கொடுமை’ எனப் பெயரிப்பட்டிருக்கிறது.
டெல்லியில் நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு இந்தியாவில் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன.
அதில் ஒன்றுதான் 'டிஜிட்டல் பாலியல் வன்கொடுமையும் குற்றம் என்ற சட்டம். இந்தச் சட்டம் IPC பிரிவு 375 (பாலியல் வன்கொடுமை) மற்றும் பாலியல் குற்றத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (POCSO) ஆகிய சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு இது போன்ற குற்றம் ஒரு மானபங்கச் செயலாகப் பார்க்கப்பட்டதே தவிர, பாலியல் வன்கொடுமை என்ற சட்டபூர்வ வரம்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments