Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வடக்கில் புதிதாக 600 கடலட்டை பண்ணைகள் ; மேலும் 339க்கும் அதிகமான பண்ணைக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது!


வடமாகாணத்தில் 32 கடலட்டை பண்ணைகள் காணப்பட்ட நிலையில்,  தான் கடற்தொழில் அமைச்சராக பதவியேற்ற பின்னர்  600 கடலட்டை பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் , மேலும் 339க்கும் அதிகமாக கடலட்டை பண்ணை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாகவும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில், 

கடற்தொழிலாளர்கள் தமது தொழில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் கடல் வளங்கள் அழிக்கப்படுவதுடன் , கடற்தொழிலாளர்களின் உபகரணங்கள் , படகுகள் என்பன சேதமாக்கப்படுவதனாலும் அவர்கள் வாழ்வாதாரம் அழிந்து வருகின்றது. 

இந்த நிலையில் நாங்கள் பழையவை கழிதல் எனும் அடிப்படையில் புதிய தொழிநுட்பங்களை புகுத்தி வாழ்வாதாரங்களை பெருக்குவதற்கு வழி ஏற்படுத்த வேண்டும். 

அதனை அடிப்படையாக கொண்டே கடலட்டை வளர்ப்பு , பாசி வளர்ப்பு , மீன் வளர்ப்பு , இறால் வளர்ப்பு என்பவற்றை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். 

வடக்கில் 5000 ஏக்கரில் கடல் அட்டை பண்ணை

கடலட்டை பண்ணைகள் தொடர்பில் சிலர் அறிந்து பேசுகிறார்களோ அல்லது அறிந்தும் அறியாதவர்கள் போல் பேசுகிறார்களோ என எனக்குத் தெரியாது.

வடக்கு மாகாணத்தில் சுமார் 5000 ஏக்கரில் கடல் அட்டை பண்ணைகளை விரிவுபடுத்த  ஏற்கனவே திட்டங்கள் தீட்டப்பப்பட்டுள்ள  நிலையில் சுமார் 1150 ஏக்கரில் கடலட்டைப் பண்ணைகள் செயல்படுத்தப்படுகிறன.

நான் அமைச்சராக வர முன்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் 18 பண்ணைகளும், யாழ் மாவட்டத்தில் 11 பண்ணைகளும் மன்னார் மாவட்டத்தில் 3 பண்ணைகளுமாக 32 பண்ணைகள் காணப்பட்டன.

நான் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் கிளிநொச்சி மாவட்டத்தில் 277 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் மேலும் 163 பண்ணைகள் அமைக்கப்பட  உள்ளது.

யாழ் மாவட்டத்தில் 245 பண்னைகள் அமைக்கப்பட்டதுடன் மேலும் 176 பண்ணைகள் அமைக்கப்படவுள்ளதோடு மன்னார் மாவட்டத்தில் 78 பண்ணைகள் அமைக்கப்பட்டதுடன் இன்னும் பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன.

ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டே அனுமதிகள் வழங்கப்படுகின்றன. 

நாரா நிறுவனம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் போன்றவற்றினால் ஆய்வு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட பகுதிகளிலையே கடலட்டை பண்ணைகள் அமைக்கப்படுகின்றன. 

ஏனினும், தன்னிச்சையாக யாராவது அனுமதிகள் இன்றி கடலட்டை பண்ணைகளை அமைப்பார்களாயின் அவை அகற்றப்படும்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள பண்ணைகளில் 95 வீதமானவை அந்தந்தப் பிரதேசத்தினை சேர்ந்த கடற்றொழிலாளர்களினாலேயே  அமைக்கப்பட்டிருக்கின்றன.

அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக மக்களை உசுப்பேத்தி அரசியல்  செய்யும் அரசியல்வாதி நான் அல்ல. அண்மையில் யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நூல் வெளியீடு ஒன்றின் போது கூட கடலட்டை பண்ணைகளால் சூழலுக்கு ஆபத்து என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சூழலியலாளர் என ஒருவர் சூழலுக்கு ஆபத்தானது கடலட்டை பண்ணை என கூறி இருந்தார். அவர் வடமாகாண சபையின் அமைச்சராக இருந்த போது ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியவர்.அவருக்கு சூழல் பாதுகாப்பு தொடர்பில் கதைக்க தகுதியில்லை. 

அதேபோன்று கடலட்டை பண்ணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் பலர் கடலட்டை பண்ணைகள் அமைக்க எம்மிடம் அனுமதி கோரி , அவர்களுக்கு அனுமதிகள் வழங்கப்படாத நிலையில் அவர்கள் எதிர்க்கின்றார்கள். 

மக்களின் எதிர்காலத்துக்கு எது சரியோ அதை முன்பே திட்டமிட்டு பலவற்றை நிறைவேற்றியுள்ளதோடு இன்னும் நிறைவேற்றுவேன்.

பருத்தித்தீவில் சீனர்கள் இல்லை - நல்லாட்சி காலத்திலையே அரியாலையில் சீனர்கள் கடலட்டை வளர்த்தனர் 

பருத்தித்தீவு  கடல் அட்டை பண்ணையில் சீன இராணுவத்தினர் இருப்பதாகவும் இதனால் இந்தியா தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்தப் பண்ணைகளுக்கும் சீனா்களுக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரியாலையில் உள்ள கடல் அட்டை குஞ்சு இனப்பெருக்க நிலையத்தில் ஏற்கனவே சீனர்கள் வந்தார்கள். அங்கு இருக்கின்ற சீனர்களை தவிர வேறு யாரும் இதுவரை கடலட்டை பண்ணை செயற்பாடுகளில் வடக்கில் ஈடுபடவில்லை.

ஆனால், இந்தியா, சீனா போன்ற நாடுகள் கடலட்டை பண்ணைகளில் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம் செலுத்தி வருகினனறன.

அவ்வாறு, என்னை அணுகியவர்களிடம் வருடாந்தம் 25 மில்லியன் கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்து எமக்கு வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளேன்.

என்னை பொறுத்தவரையில் இந்தியாவா? சீனாவா? என்ற வினா எழுப்பப் படுமானால் இந்தியாவே என கூறிக் கொள்வதோடு கடல் சார்ந்து மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் விரைவாகவும் வினைதிறனாகவும் செயல்படுத்தப்படும்.

அத்துடன் எமது மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றும் பட்சத்திலேயே அடுத்த கட்ட நகர்வுகள் மேற்கொள்ளப்படும்.

வடக்கில் கடலட்டை பதனிடும் நிலையங்கள் அமைக்கப்படும். 

கடலட்டைகளுக்கான சந்தை சீனா , வடகொரியா போன்ற நாடுகளிலையே உள்ளன. ஒரு கிலோ கடலட்டை சுமார் 150 டொலர் ஆகும்.  அதனை பதப்படுத்தி உலர வைத்து , உண்பதற்கு தயாரான நிலையில் விற்பனை செய்வோம் ஆயின் ஒரு கிலோ ஆயிரம் டொலருக்கும் அதிகமாக விற்பனை செய்யலாம். 

கடலட்டைகளை பதப்படுத்தும் நிலையங்களை அமைத்து, அவற்றை வடக்கில் இருந்தே ஏற்றுமதி செய்வதற்கான திட்டங்கள் உள்ளன. 

அத்துடன் மண்டைதீவில் பாசி வளர்ப்பு திட்டம் ஒன்றும் உள்ளது. அதற்கும் இந்திய நிறுவனம் ஒன்று எம்முடன் பேசியுள்ளது. அது சாத்தியமானால் மண்டைதீவில் பாசி வளர்ப்பு மேற்கொள்ளப்படும்,

மனிதவுரிமை ஆணைக்குழு பக்க சார்பாக செயற்படுகிறது. 

பூநகரி கிராஞ்சி பகுதி கடலட்டை தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு பக்க சார்பாக செயற்படுகிறது. 

கடலட்டை பண்ணைகளால் தாம் பாதிக்கப்படுகிறோம் என இருவர் கொடுத்த முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டவர் , கடலட்டை பண்ணைகளால் தமது வாழ்வாதாரம் மேம்படும் என 187 பேர் கையொப்பம் வைத்து கொடுத்த பதில் முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை. 

அதனால் மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு பக்கசார்பாக , அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுகின்றனவா ? என தோன்றுகின்றது. 

அப்பகுதியில் பட்டி வலை மீன் பிடி முறைமை காணப்படுகின்றது. பட்டி வலை மீன் பிடியினால் , மீன் வளங்கள் அழிவடைகின்றன. அதற்கும் அனுமதிகள் பெறப்பட வேண்டும். பல பட்டி வலைகள் அனுமதி பெறப்படாதவை. 

அதனால் , அனுமதி பெறப்படாத பட்டி வலைகள் , கடலட்டை பண்ணைகளை அகற்றி , நற்றா நிறுவனம் ஊடாக மீண்டும் ஆய்வுகளை மேற்கொண்டு அளவுகளை வகுத்து அனைத்தையும் ஒரு ஒழுங்குக்குள் கொண்டு வரவுள்ளோம் என மேலும் தெரிவித்தார். 

No comments