இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஆகவே வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான நிலவரப்படி, மொத்தமாக 8,202 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளது.
அதில் ,709 பேர் உயிரிழந்துள்ளனர். 667 பேர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்தனர். ஏனையவர்கள் வைத்திசாலைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
விபத்துகளில் உயிரிழந்த 709 பேரில் 220 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் , 102 பேர் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 179 பாதசாரிகளும் மரணித்துள்ளதாகவும். வீதியில் நிகழும் விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் இடம்பெற்றுள்ளவை எனவும் தெரியவந்துள்ளது.
எனவே, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் வீதியில் வாகனங்களை செலுத்தும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் குறிப்பிட்டுள்ளார்.